Published : 29 Jun 2020 07:35 PM
Last Updated : 29 Jun 2020 07:35 PM

சென்னையைப் போல் மதுரையில் கரோனா பரவல், நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு காரணம் என்ன?

மதுரையில் கடந்த 3 வாரங்களாகவே ‘கரோனா’ பரவல் அதிகரிப்பதாகவும், நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிப்பதுமாகவும் உள்ளது.

மதுரை மாவட்டத்தில் தினமும் 200 முதல் 300 பேர் வரை கரோனா தொற்று கண்டறியப்படுகிறது. ஆனால், இந்த தொற்று நோய்க்கு பாதிக்கப்பட்டோரும், உயிரிழந்தோரும் இன்னும் அதிகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

மதுரையில் ஆரம்பத்தில் 200 முதல் 300 பேருக்கு மட்டுமே மருத்துவப் பரிசோதனைகள் நடந்தது. ஆனால், தற்போது 1,500 முதல் ஆயிரம் 2,500 வரை தினமும் பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை கூறுகிறது.

ஆனால், அவ்வளவு பரிசோதனைகள் நடப்பதில்லை எனவும், அதிகப்பட்சம் 1,500 பேர் வரையே பரிசோதனைகள் நடத்தப்படுகிறது. இதில், அரசு மருத்துவமனையில் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறவர்களுக்கே அதிகமான ‘கரோனா’ பரிசோதனை நடத்தப்படுகிறது.

அரசு மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மிகக் குறைவாகவே ‘கரோனா’ பரிசோதனை நடத்தப்படுகிறது. சாதாரண பொதுமக்கள் அறிகுறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதாரநிலையங்கள், அரசு மருத்துவமனைக்குச் சென்றால் அவர்களுக்கு உடனடியாக மருத்துவர்கள் பரிசோதனை செய்வதில்லை.

காய்ச்சல், சளி அறிகுறியிருந்தால் அவர்களுக்கு 2 முதல் 3 நாட்கள் வரை மருந்து மாத்திரைகள் வழங்கி அவர்களை வீட்டிலே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

2 நாட்கள், 3 நாட்கள் மருந்து சாப்பிட்டும் குணமடையாமல் அறிகுறியால் சிரமப்பட்டால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு ஒரிரு நாளில் ‘கரோனா’ பரிசோதனை செய்யப்படுகிறது.

அதில் ‘கரோனா’ இருப்பது உறுதியாகி மூச்சுதிணறல், இருமல் உள்ளிட்ட அனைத்து அறிகுறியுடன் தொடர் கண்காணிப்பு, சிகிச்சை தேவைப்படுவோர், முதியவர்கள் ஆகியோர் அரசு மருத்துவமனையிலே உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ‘கரோனா’ வார்டுகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

அறிகுறி இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியமுடன் இருப்பவர்கள், அரசு மருத்துவமனைக்கு வெளியே அமைந்துள்ள தோப்பூர் காசநோய் மருத்துவமனைக்கும், மற்ற தனிமைப்படுத்தப்பட்ட ‘கரோனா’ முகாம்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

மதுரையைப் பொறுத்தவரையில் தற்போது நோயாளிகளுடன் தொடர்பில் இருக்கிறவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு அவரவர் தொந்தரவுகளுக்குத் தகுந்த சிகிச்சை வழங்கி அதில் குணமடையாதப்பட்சத்திலே பரிசோதனைசெய்து வார்டுகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.

பரிசோதனை, சிகிச்சையில் தொடரும் இந்த தாமதமே மதுரையில் தற்போது ‘கரோனா’ பரவல் அதிகரிப்பிற்கும், நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிப்பதற்கும் முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

‘கரோனா’வை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை வழங்கினால் இந்த நோயால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கலாம்.

மதுரையில் ஆரம்பத்தில் அரசு மருத்துவமனையில் மட்டுமே ‘கரோனா’ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு 12 அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கும், தற்போது அது 32 அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்களுக்கும் பரிசோதனை மையங்கள் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், பரிசோதனை மிகக் குறைவாக உள்ளதால் நோயாளிகள் சிகிச்சைக்கும், பரிசோதனைக்கும் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையைப் போல் மிக அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகளை அதிகரிப்பதும், பொதுமக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுவது போன்ற சுய ஒழுக்கமும், பாதுகாப்பும் மட்டுமே ‘கரோனா’வை ஒழிக்க ஒரே வழி என்றும், ஊரடங்கு மட்டுமே ‘கரோனா’வை ஒழிப்பதற்கான தீர்வு கிடையாது என்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x