Published : 29 Jun 2020 02:53 PM
Last Updated : 29 Jun 2020 02:53 PM

ஊரடங்கு தீர்வல்ல; அதை அமல்படுத்தப் பரிந்துரைக்கவில்லை; பொதுப் போக்குவரத்துக் கட்டுப்பாடு தேவை: மருத்துவ நிபுணர்கள் குழு பேட்டி

சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக இரட்டிப்பு எண்ணிக்கை அறிய முடிந்தது. ஊடகங்கள் இதுகுறித்துக் கவலைப்படவேண்டாம், பெரிதாக எண்ண வேண்டாம். பொது ஊரடங்கை நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு காரணமாக நோய்த்தொற்று பரவுதல் குறைந்தது. இதற்காக ஊரடங்கைத் தொடர முடியாது என ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தெரிவித்தார்.

சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு இன்று ஆலோசனை நடத்தி, பரிந்துரைகளை அளித்தது.

பின்னர் அதன் தலைவர் பிரதீப் கவுர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

''பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது நல்ல விஷயம். தினமும் 32 ஆயிரம் அளவில் சோதனைகள் அதிகரித்துள்ளன. நமக்கு ஏன் சோதனைகள் முக்கியம் என்றால் ஆரம்ப அளவில் நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் நோய்த்தொற்றுள்ளவர்களைக் காப்பாற்ற முடியும், சரியான சிகிச்சை கொடுக்க முடியும்.

இதுவரை நாம் சென்னையை மட்டுமே பேசி வருகிறோம், ஆனால், கடைசி 2 வாரங்களைப் பார்க்கும்போது மாவட்டங்களில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் குறிப்பாக திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நோய்த்தொற்று இரட்டிப்பாகும் நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அதனால் சென்னையில் செய்த முன்முயற்சிகள், நடைமுறைகளை மற்ற மாவட்டங்களிலும் செய்வதற்குப் பரிந்துரை செய்துள்ளோம். இதில் வெற்றிகரமான முன் முயற்சி என்னவென்றால் காய்ச்சல் முகாம்கள் மூலம் நேரடியாகச் சென்று அங்கு ஆய்வு செய்து தொற்றுள்ளவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது.

இதைச் சென்னையில் அதிகமான பகுதிகளில் செய்துள்ளனர். அதனால் சென்னையில் நிறையப் பேரைக் கண்டுபிடிக்க முடிந்துள்ளது. அதனால் சென்னையில் சிறிது தொற்று எண்ணிக்கை அதிகரிப்பதும் காட்டப்படுகிறது. இந்த முன் முயற்சியை மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தி அமல்படுத்தப் பரிந்துரைத்துள்ளோம்.

ஆகவே, உங்கள் பகுதியில் இதுபோன்ற அறிகுறி, காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், சுவை உணர்வு இல்லாமல் இருப்பது இதுபோன்ற ஏதாவது ஒரு அறிகுறி இருந்தால் உடனடியாக முகாமுக்கு வந்துவிட வேண்டும்.

சிலர் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து அச்சப்படுகிறார்கள். சென்னையில் நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் தொற்று இரட்டிப்பாகும் நாட்கள் அதிகரித்துள்ளன. இது நல்ல விஷயம். எத்தனை நாளில் நோய்த்தொற்று அதிகரிப்பதற்கு நாம் அதிக அளவிலான தொற்றுள்ளவர்களைக் கண்டறிந்துள்ளோம். அது நல்ல விஷயம்.

இந்தப் போக்கைத் தொடர விடவேண்டும். அவ்வாறு தொடர மக்களின் ஒத்துழைப்பு வேண்டும். நமது நோக்கம் என்னவென்றால் மரணவிகிதத்தைக் குறைக்கவேண்டும், ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டும். எண்ணிக்கையை நாம் கண்டுகொள்ள முடியாது. அதிக அளவில் சோதனை செய்யும்போது எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை கொடுப்பதுதான் சிறந்தது.

ஆகவே, ஊடகங்கள் இதுகுறித்துக் கவலைப்படவேண்டாம், பெரிதாக எண்ண வேண்டாம். பொது ஊரடங்கை நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு தீர்வல்ல. சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக இரட்டிப்பு எண்ணிக்கை அறிய முடிந்தது. நோய்த்தொற்றுப் பரவுதல் குறைந்தது. இதற்காக ஊரடங்கைத் தொடர முடியாது.

நமது நோக்கம் என்ன? சில விஷயங்களை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. நாங்களும் பரிந்துரைக்கிறோம். நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் ஒரு மாவட்டத்தைக் கையிலெடுத்து அதில் ஒரு ஏரியாவை எடுத்து நோய்த்தொற்று, சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தரவுகளைக் கையிலெடுத்து ஒரு மாவட்டத்தின் நிலையைக் கணக்கிடுகிறோம்.

அதையெல்லாம் வைத்து எந்தப் பகுதியில் நிலைமை சரியில்லை என்பதைக் கணக்கிட்டு அந்தப் பகுதியில் கட்டுப்பாட்டை அதிகப்படுத்தி அங்குள்ள மக்களுக்கு அதிக அளவில் சிகிச்சை அளிப்பது என்பதன் மூலம் சரி செய்ய முயல்கிறோம். ஆகவே நாங்கள் சொல்லும் இன்னொரு பரிந்துரை பொதுப் போக்குவரத்து காரணமாக தொற்று அதிகரித்துள்ளதை நிறைய மாவட்டங்களில் கண்டறிந்துள்ளோம். ஆகவே பொதுப்போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

அதேபோன்று பொதுமக்கள் ஒன்று கூடுவதை அனுமதிக்கக்கூடாது. ரேபிட் சோதனை நமக்குத் தேவை இல்லை. பிசிஆர் சோதனைகள் மட்டும் போதும். தொற்று இருப்பதாக அறிகுறி அறிந்தால் பிசிஆர் சோதனை போதும்”.

இவ்வாறு பிரதீப் கவுர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x