Published : 29 Jun 2020 01:50 PM
Last Updated : 29 Jun 2020 01:50 PM

சென்னையில் கரோனா பரிசோதனை மேற்கொள்பவர்கள் முடிவுகள் வரும் வரை கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்: கோப்புப்படம்

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பரிசோதனை மையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் அவரும், அவரது குடும்பத்தினரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஜூன் 29) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளும் பொதுமக்கள் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவரது வீட்டில் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

பரிசோதனை முடிவில் கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் புதிய நடைமுறைப்படி, அவர்கள் வழக்கம் போல் அவரது பணியினை தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றியும், தனிமனித இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை அணிந்தும் மேற்கொள்ளலாம்.

மேலும், கரோனா பரிசோதனை முடிவில் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டால் பரிசோதனை மேற்கொண்ட நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கான அனைத்து ஸ்கிரீனிங் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி மருத்துவமனைகளிலோ, கோவிட்-19 பாதுகாப்பு மையங்களிலோ அல்லது அவர்களின் இல்லங்களிலோ தனிமைப்படுத்தப்படுவார்கள் என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x