Published : 12 Sep 2015 11:06 AM
Last Updated : 12 Sep 2015 11:06 AM
இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.80 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, கண்வலிக் கிழங்கு உற்பத்தியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், திண்டுக்கல், அரியலூர் உட்பட 12 மாவட்டங்களில் 12,500 ஏக்கர் பரப்பளவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கண்வலிக் கிழங்கு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், மூலனூரில் மொத்த கொள்முதல் மையங்கள் மூலம் பெறப்படும் கண்வலிக் கிழங்கு, ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு பெறப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், விவசாயிகள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு கண்வலிக் கிழங்கு மூலிகை விதை உற்பத்தியாளர் சங்கத் தலைவர் லிங்கசாமி கூறியதாவது, “மார்ச் மாதத்தில் கிலோ ரூ.600-க்கு பெறப்பட்டு, ரூ.1,200 வரை விற்கப்பட்டது. இடைத்தரகர்களால் கண்வலிக் கிழங்கு விவசாயிகள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் மாநிலம் முழுவதும் கொள்முதல் செய்த வகையில், விவசாயிகளுக்கு ரூ.80 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் நேற்று நடந்த சிறப்புக் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர். அதில், கண்வலிக் கிழங்கை அங்கீகரிக்கப்பட்ட பயிர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதன்மூலமாக பொருளீட்டுக் கடன் வழங்க வேண்டும். இடைத்தரகர்களிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மிகப் பெரிய அளவில் அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் தொழிலாக கண்வலிக் கிழங்கு சாகுபடி உள்ளது என்றும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT