

கோவில்பட்டி தந்தை, மகன் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற நீதிமன்ற அனுமதி தேவையில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து விசாரித்து வருகிறது
இந்நிலையில் இன்று நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் செல்லப்பாண்டியன், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ க்கு மாற்ற அனுமதிக்குமாறு முறையிட்டார்.
அதற்கு நீதிபதிகள், "அது அரசின் கொள்கை முடிவு. வழக்கை சிபிஐ க்கு மாற்றுவதென்றால் மாற்றுங்கள். அது அரசின் முடிவு அதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை.
இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. விசாரணையையும் கண்காணித்து வருகிறது. காவல்துறையினர் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை எனத் தெரிகிறது.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றும் பட்சத்தில், வழக்கு தொடர்பான ஆவணங்கள், நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை, வழக்குக்குறிப்பு ஆகியவற்றை சிபிஐ விசாரணை அதிகாரியிடம்தான் ஒப்படைக்க வேண்டும்" என அறிவுறுத்தினர்.