Published : 29 Jun 2020 07:52 AM
Last Updated : 29 Jun 2020 07:52 AM

போலீஸார் தாக்கியதாக குற்றச்சாட்டு; தென்காசி அருகே ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு: உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல்

தென்காசி அருகே வீரகேரளம்புதூரில் போலீஸார் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் குவிக்கப்பட்ட போலீஸார்.

தென்காசி​

தென்காசி அருகே போலீஸார் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் மகன் குமரேசன்(25). ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 10-ம் தேதி ரத்த வாந்தி எடுத்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தென்காசி அருகே வீரகேரளம்புதூரில் போலீஸார் தாக்கியதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் குவிக்கப்பட்ட போலீஸார். (உள்படம்) குமரேசன் பின்னர் அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி குமரேசன் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் தென்காசி காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆகியோருக்கு குமரேசனின் தந்தை நவநீத கிருஷ்ணன் புகார் மனு அனுப்பி உள்ளார். அதில், இடப் பிரச்சினை காரணமாக என் மகன் மீது ஒருவர் அளித்த புகாரின்பேரில், வீரகேரளம்புதூர் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீஸார் கடுமையாகத் தாக்கியதால், உடல்நிலை பாதிக்கப்பட்டு எனது மகன் உயிரிழந்துவிட்டார். சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

குமரேசன் உயிரிழந்ததை அறிந்ததும் வீரகேரளம்புதூரில் அவரது உறவினர்கள், பொதுமக்கள் நேற்று முன்தினம் இரவு சாலை மறியல் செய்தனர். இவர்களுடன் ஆலங்குளம் டிஎஸ்பி ஜாகிர் உசேன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரேதப் பரிசோதனை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி உறுதி அளித்ததால் அனைவரும் மறியலைக் கைவிட்டனர்.​

இது குறித்து மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ் கரன் விடுத்துள்ளஅறிக்கையில், காவல் துறையின் துன்புறுத்தலுக்கு சாத்தான்குளத்தில் இருவரைத் தொடர்ந்து குமரேசனின் மரணமும் நிகழ்ந்துள்ளது. குமரேசன் மரணத்துக்குக் காரணமான காவல் துறையினர் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும். அவரது குடும்பத்துக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x