Last Updated : 28 Jun, 2020 04:33 PM

 

Published : 28 Jun 2020 04:33 PM
Last Updated : 28 Jun 2020 04:33 PM

கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் கண்டு அச்சப்படத் தேவை இல்லை: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் 

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவை இல்லை என மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று (ஜூன் 28) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

கரோனா சிகிச்சைக்காக வீரியமிக்க விலை உயர்ந்த மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், மனநல ஆலோசனையும், உயர்தரமான உணவுகளும் கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் 44,094 பேர் (நேற்று வரை) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சிறப்பான முறையில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குணமடைந்து செல்வோர் பிளாஸ்மா கொடுக்க முன்வரவேண்டும்.

தமிழகத்தில் பரிசோதனை செய்யப்படுவோரில் 10 சதவீதம் பேருக்கு கரோனா தொற்று இருக்கிறது. சென்னை போன்ற சில இடங்களில் அதன் எண்ணிக்கை உயர்கிறது. பொதுவாக எண்ணிக்கையைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவை இல்லை.

அனைத்து மாவட்டங்களிலும் தேவையான எண்ணிக்கையில் படுக்கை உள்ளிட்ட வசதிகள் தயார் நிலையில் உள்ளன. கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையாக ஒரே நாளில் சுமார் 33,000 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கரோனாவை எதிர்த்து பல்வேறு துறை அலுவலர்கள் அல்லும் பகலும் அயராது உழைத்து வருகின்றனர்.

மத்திய அரசு, ஐசிஎம்ஆர் போன்ற நிறுவனங்கள் பாராட்டும் வகையில் தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை உள்ளது. கரோனா பரவலானது இதுவரை சமூகத் தொற்றாக மாறவில்லை என்றார். ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, மாவட்ட வருவாய் அலுவலர்கள் பெ.வே.சரவணன், ரம்யா தேவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x