Published : 28 Jun 2020 01:56 PM
Last Updated : 28 Jun 2020 01:56 PM
நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் 7 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மருத்துவமனைக்கே சென்று அவர்களைச் சந்தித்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள், பழங்கள், பிஸ்கட், புத்தகங்கள், பேனா மற்றும் குறிப்பேடுகளை கொடுத்து அனுப்பியதோடு ஆறுதலும் தன்னம்பிக்கையும் சொல்லும் கடிதம் ஒன்றையும் அளித்தனர்.
அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது;
அன்புத்தோழர் வணக்கம்!
வைரஸ் பரவலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளரான தங்களுக்கு இந்த நோய்த்தொற்று வந்துள்ளது எமக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. எனினும் கவலை வேண்டாம். நிச்சயமாக விரைவில் நோய்த்தொற்று நீங்கி நலமுடன் திரும்பி வழக்கமான பணியை உற்சாகமாக தொடர தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் எப்போதும் தங்களுக்கு துணை நிற்கும்.
தங்களின் தேவைக்கு எப்போதும் நிர்வாகிகளை தொடர்புகொள்ள வேண்டுகின்றோம்.
விரைவில் நலம்பெற வாழ்த்துக்கள்! என்று ஆறுதலும், தன்னம்பிக்கையும் தரும் வார்த்தைகள் அந்தக் கடிதத்தில் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவர் து.இளவரசன், செயலாளர் அ.தி.அன்பழகன், பொருளாளர் ப.அந்துவன் சேரல் உள்ளிட்டோர் மருத்துவமனை பொறுப்பு அலுவலரிடம் பழங்கள் உள்ளிட்டவற்றை கொடுத்து அனுப்பி, விரைவில் நலம்பெற வாழ்த்துகளை பகிர்ந்ததோடு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் தொலைபேசியில் நலம் விசாரித்துச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT