போலீஸ் சித்ரவதையைத் தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும்: அரசுக்கு அழுத்தம் அளிக்கக் கோரிக்கை

போலீஸ் சித்ரவதையைத் தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும்: அரசுக்கு அழுத்தம் அளிக்கக் கோரிக்கை
Updated on
1 min read

போலீஸ் சித்ரவதையைத் தண்டனைக்குரிய தனிக் குற்றமாக அறிவிக்க மத்திய அரசுக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமம் குடிமக்கள் இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.சே.ராசன், ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் கூறியதாவது:

''சாத்தான்குளத்தில் வியாபாரிகள் பென்னிக்ஸ், அவரது தந்தை ஜெயராஜ் இருவரையும் போலீஸார் கொடூரமாகத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளனர். கோவில்பட்டி எட்டயபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி கணேசமூர்த்தி காவல்துறையின் சித்ரவதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கரோனா ஊரடங்கை போலீஸார் தவறுதலாகப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் காவல்நிலையங்களில் சித்ரவதைகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதற்கு காவல்துறையை நிர்வகித்து வரும் தமிழக முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல் அதிகாரிகள் மற்றும் இதர நபர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

சித்ரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்தில் 1997-ல் இந்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. இருப்பினும் அந்தப் பிரகடனம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. எனவே சித்ரவதைக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து, சித்ரவதையை தண்டனைக்குரிய தனிக்குற்றமாக அறிவித்து காவல்துறை சித்ரவதைக்கு முடிவுகட்ட மத்திய அரசுக்கு அனைத்துக் கட்சிகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும்''.

இவ்வாறு வழக்கறிஞர் சி.சே.ராசன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in