Last Updated : 28 Jun, 2020 12:04 PM

 

Published : 28 Jun 2020 12:04 PM
Last Updated : 28 Jun 2020 12:04 PM

புதுச்சேரியில் புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று உறுதி;மேலும் ஒரு ஓய்வு பெற்ற காவலர் உயிரிழப்பு

புதுச்சேரியில் இன்று மேலும் 29 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஓய்வு பெற்ற காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 648 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆகவும் உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று(ஜூன் 28) புதிதாக 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 648 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 385 ஆக அதிகரித்துள்ளது. மேலும், ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வு பெற்ற காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 252 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று தெரிவித்திருப்பதாவது, ‘‘புதுச்சேரியில் நேற்று 512 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 29 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் 20 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியிலும், 6 பேர் ஜிப்மரிலும், ஒருவர் ஏனாமிலும், 2 பேர் பிற பகுதியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கோரிமேடு காவலர் குடியிருப்பை சேர்ந்த ஓய்வு பெற்ற 61 வயது காவலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை மாநிலத்தில் 648 பேர் பாதிக்கப்பட்டள்ளனர். தற்போது கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரியில் 209 பேர், ஜிப்மரில் 97 பேர், கோவிட் கேர் சென்டரில் 37 பேர், காரைக்காலில் 35 பேர், ஏனாமில் 2 பேர், மாஹேவில் ஒருவர், பிற பகுதியில் 4 பேர் என மொத்தம் 385 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரியில் 22 பேர், ஜிப்மரில் 8 பேர், காரைக்காலில் ஒருவர் என மொத்தம் 31 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 252 பேர் அதிகரித்துள்ளது. இதுவரை 15 ஆயிரத்து 225 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 14 ஆயிரத்து 380 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று வந்துள்ளது. 191 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன’’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சட்டப்பேரவை முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் முதல்வர் நாராயணசாமி 5 நாட்கள் தனிமை படுத்திக்கொள்ள சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக புதுச்சேரி சட்டப்பேரவை மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x