Published : 26 Jun 2020 07:59 PM
Last Updated : 26 Jun 2020 07:59 PM

ஈரானில் சிக்கியிருந்த 687 தமிழக மீனவர்களுடன் தூத்துக்குடி புறப்பட்டது போர்க் கப்பல் ஐஎன்எஸ் ஜலஸ்வா

கரோனா ஊரடங்கால் ஈரானில் சிக்கிய தமிழக மீனவர்கள் 687 பேர்களை ஏற்றிக் கொண்டு இந்திய கடற்படையின் போர்க் கப்பலான ஐஎன்எஸ் ஜலஷ்வா ஈரான் நாட்டில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

கரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள், மத்திய அரசின் 'வந்தே பாரத்' திட்டத்தின் மூலம் கீழ் விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் தாயகத்திற்குதொடர்ந்து அழைத்து வரப்படுகின்றனர்.

வந்தே பாரத் திட்டத்தின் ஒரு பகுதியான 'சமுத்திர சேது' என்ற திட்டத்தின் கீழ் இலங்கை, மாலத்தீவு மற்றும் ஈரான் நாட்டில் சிக்கியுள்ளவர்களை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்படுகின்றனர்.

அந்தவகையில் கரோனா ஊரடங்கால் ஈரானி் சிக்கிய தமிழக மீனவர்களை ஏற்றிக் கொண்டு வருவதற்காக இந்திய கடற்படை போர்க் கப்பலான ஐஎன்எஸ் ஜலஷ்வா ஈரான் நாட்டின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்தை புதன்கிழமை சென்றடைந்தது.

முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஈரான் நாட்டில் கரோனா வைரஸ் நோய் சர்வதேச பரவல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் மீன்பிடி தொழில் மேற்கொண்டு வந்த தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தமிழக அரசு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொண்டது.

வியாழக்கிழமை ஈரானில் இருந்து தாயகம் திரும்புவதற்காக பதிவு செய்துள்ள தமிழக மீனவர்கள் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளால் அப்பாஸ் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு 687 தமிழக மீனவர்களுக்கு கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கப்பலில் அனுமதிக்கப்பட்டனர். பந்தர் அப்பாஸ் துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை இரவு ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பல் புறப்பட்டது. இந்த கப்பல் 5 நாட்கள் பயணத்திற்கு பிறகு எதிர்வரும் புதன்கிழமை தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்து சேரும்.

இந்த கப்பலில் தென்மாவட்டங்களை மீனவர்கள் சேர்ந்தவர்கள் தான் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கப்பலில் வருவோர் உடனடியாக சிறப்பு பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு கரோனா பரிசோதனை, தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்வவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x