Last Updated : 26 Jun, 2020 06:17 PM

 

Published : 26 Jun 2020 06:17 PM
Last Updated : 26 Jun 2020 06:17 PM

பேருந்து வசதி, இ-பாஸ் கிடைக்காததால் மாவட்டம் விட்டு மாவட்டம் பணிக்குச் செல்லும் பணியாளர்கள் தவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

கள்ளக்குறிச்சி

மாவட்டம் விட்டு மாவட்டம் பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் பேருந்து வசதி இல்லாததாலும், இ-பாஸ் கிடைக்காததாலும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் படிப்படியாக தளர்த்தப்பட்டது. மண்டலங்கள் உருவாக்கப்பட்டு மண்டலங்களுக்கிடையே போக்குவரத்தும் இயக்கப்பட்டது. இந்த நிலையில், கரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதால் தளர்த்தப்பட்ட ஊரடங்கில் மாற்றம் செய்யப்பட்டு, மாவட்டத்திற்குள்ளேயே போக்குவரத்து இயக்கப்படும் என அரசு அறிவித்திருப்பதோடு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவே இ-பாஸ் இருந்தால் செல்ல முடியும் என அறிவிப்புச் செய்து, கடந்த 25-ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.

இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் பணிக்குச் செல்லும் அரசு ஊழியர்களும், தனியார் நிறுவன ஊழியர்கள், வியபாரிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருப்பதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.

கடலூரைச் சேர்ந்த தோட்டக்கலைத் துறை அரசு ஊழியர் ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அண்மையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த வாரம் வரை மண்டலங்களுக்கிடையே போக்குவரத்து இயக்கப்பட்டதால், பணிக்குச் செல்வதில் சிரமமின்றி அரசுப் பேருந்தில் பயணித்து வந்தார். தற்போது மாவட்டத்திற்குள்ளேயே பேருந்து இயக்கம் என்பதால், பணிக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பாஸ் வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டால் பேருந்து செல்லுமா எனத் தெரியவில்லை என்றார்.

தனியார் துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், "அரசு ஊழியர்களைப் பற்றி கவலைப்படும் அரசு, தனியார் ஊழியர்களைக் கணக்கில் கொள்வது கிடையாது. அரசுத் துறையைக் காட்டிலும் தனியார் துறையில்தான் அதிகம் பேர் பணிபுரிந்துவரும் நிலையில் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. எங்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் இருக்கும்போது, எங்களை அலட்சியப்படுவது எந்த விதத்தில் நியாயம். எனவே தனியார் துறை ஊழியர்களுக்கும் சிறப்பு ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும்" என்றார்.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறையில் விசாரித்தபோது, "மாவட்ட அலுவலகங்களுக்குச் செல்லும் வகையில் அரசு ஊழியர்களுக்கு காலையும் மாலையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் துறை ஊழியர்கள் பயணிக்க, தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் கட்டணம் செலுத்தினால் பேருந்து இயக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட தொமுக கவுன்சில் தலைவர் சி.சுகுமாரிடம் கேட்டபோது, "அரசுப் பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படவில்லை. மாவட்டத் தலைநகரில் உள்ள அலுவலகங்களுக்கு மட்டும் அரசுப் பேருந்து இயக்கினால், மற்ற பகுதிகளில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களின் நிலையை அரசு ஆராயதது ஏன்? எனவே, அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்படும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x