Published : 25 Jun 2020 06:53 PM
Last Updated : 25 Jun 2020 06:53 PM

கரோனா வார்டு பணிக்கு அலோபதி பட்டமேற்படிப்பு மாணவர்களை போல் ஆயுஷ் கல்லூரி பட்டமேற்படிப்பு மாணவர்கள் அனுப்பப்படுவார்களா?

மதுரை

தமிழக ஆயுஷ் மருத்துவத்துறையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் ‘கரோனா’ வார்டு பணிக்கு அனைத்து மருத்துவர்களையும் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதனால், அலோபதி பட்டமேற்படிப்பு மாணவர்களை போல் அரசு மற்றும் தனியார் ஆயுஷ் கல்லூரிகளில் படிக்கும் பட்டமேற்படிப்பு மாணவர்களை ‘கரோனா’ வார்டு பணிக்கு அனுப்ப வேண்டும் என்று ஆயுஷ் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்திய மருத்துவம்(சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா) மற்றும் ஹோமியோபதி துறை, மத்திய சுகாதாரத்துறையில் ஒரு அங்கமாக செயல்படுகிறது. மத்திய அரசில், இதனை ஆயுஷ் (சித்தா, ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் ஹோமியோபதி) என்று சொல்வார்கள்.

தமிழக அரசில் சித்தா மருத்துவத்துறை என்றும், அதன் மாவட்ட அதிகாரிகள் மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் என்றே அழைக்கப்படுகிறார்கள். தற்போது அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள கரோனா வார்டுகளில் ஆயுஷ் மருத்துவர்களை பணிநியமனம் செய்வதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் சென்னை, மதுரையில் ‘கரோனா’ வார்டில் தற்போது ஆலோபதி மருத்துவர்களை போல் ஆயுஷ் மருத்துவர்களும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆனால், ஆயுஷ் மருத்துவத்துறையில் ஏற்கணவே போதுமான மருத்துவர்கள் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. தற்போது ‘கரோனா’ வார்டு பணிக்கு அவர்கள் செல்ல வேண்டிய இருப்பதால் அவர்கள் போதுமான காலம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமலே சுழற்சி முறையில் மீண்டும் ‘கரோனா’ வார்டு பணிக்கு வர வேண்டிய உள்ளது.

இதுகுறித்து சித்தா மருத்துவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் ஹோமியோபதி கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் 1,000க்கும் மேற்பட்ட பட்டமேற்படிப்பு மாணவர்கள் படிக்கின்றனர். அலோபதி துறையில் ‘கரோனா’ வார்டில் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் அனைவரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பணிபுரிகின்றனர்.

ஆனால், சித்த மருத்துவத்துறையில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, யோகா மற்றும் ஹோமியோபதி கல்லூரிகளில் படிக்கும் பட்டமேற்படிப்பு மாணவர்கள், ‘கரோனா’ வார்டு பணிக்கு சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பயன்படுத்தப்படாமல் ஒன்று கல்லூரிகளில் உள்ளனர் அல்லது வீட்டில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஏற்கணவே ஆயுஷ் மருத்துவர்களாக இருப்பவர்களே.

இவர்கள் அரசு மருத்துவராக இருந்தால் அரசு தற்போதும் ஊதியம் வழங்கி கொண்டிருக்கும். தனியார் மருத்துவராக இருந்து பட்டமேற்படிப்பு படித்தால் அவர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும்.

அதனால், அலோபதி மருத்துவத்துறையை போல் ஆயுஷ் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் பட்டமேற்படிப்பு மாணவர்களை ‘கரோனா’ வார்டுகளில் பயன்படுத்தலாம். அவர்களும் அவரவர் சொந்த மாவட்டங்களில் இருந்தபடியே ‘கரோனா’ வார்டகளில் பணிபுரியலாம்.

அரசு, 50 வயதிற்கு கீழான மருத்துவர்களை மட்டுமே ‘கரோனா’ வார்டில் பணிபுரிய சொல்கிறது. ஆனால், ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆயுஷ் துறையில் 50 வயதிற்கு கீழ் குறைவான மருத்துவர்களே உள்ளனர். உதாரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள 49 மருத்துவர்களில் 30 மருத்துவர்களே 50 வயதிற்கு கீழானவர்கள்.

இவர்களில் சிலர் பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டனர். மீதமுள்ளவர்களை சுழற்சி முறையில் ‘கரோனா’ பணிக்கு அனுப்ப வேண்டிய உள்ளது. அது போல், ஆயுஷ்துறையில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் தற்காலிக மருத்துவர்களை போதுமான அளவு அரசு நியமிக்கலாம். அலோபதி மருத்துவர்கள் ‘கரோனா’ வார்டில் பணிபுரிந்தால் அவர்கள் 14 நாள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள விடுமுறை வழங்கப்படுகிறது.

அவர்களுக்கு அதற்கு பிறகு ஒரு மாதம் கழித்து சுழற்சி முறையில் ‘கரோனா’ பணியே வருகிறது. ஆனால், ஆயுஷ் துறையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் ‘கரோனா’ பணிக்கு செல்லும் ஆயுஷ் மருத்துவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள காலஅவகாசம் கிடைக்காமல் உடனடியாக மீண்டும் பணிக்கு வர வேண்டிய உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x