Last Updated : 25 Jun, 2020 05:18 PM

 

Published : 25 Jun 2020 05:18 PM
Last Updated : 25 Jun 2020 05:18 PM

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதுச்சேரி அரசு வழக்கறிஞராக தமிழகத்தைச் சேர்ந்தவர் நியமனம்: கிரண்பேடியின் முடிவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதுச்சேரி அரசு வழக்கறிஞராக தமிழகத்தைச் சேர்ந்தவரை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாக நியமித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யாவிட்டால் விரைவில் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்த வழக்கறிஞர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் புதுச்சேரி அரசு வழக்கறிஞராக புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் காந்திராஜ் இருந்தார். அவரது பதவிக்காலம் முடிவடைந்ததால், ஓராண்டு பதவி நீட்டிப்பு தர துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கோப்பு அனுப்பப்பட்டது. ஆனால், புதுச்சேரி அரசின் கோப்பினை நிராகரித்துவிட்டு தமிழகத்தைச் சேர்ந்த மாலா என்பவரை சென்னை உயர் நீதிமன்ற புதுச்சேரி அரசு வழக்கறிஞராக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நியமித்துள்ளார். புதுச்சேரி அரசு வேறு ஒருவரை நியமிக்கும் வரையிலோ அல்லது ஓராண்டுக்கோ மாலா இப்பொறுப்பில் இருப்பார் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதுச்சேரியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தலைவர் முத்துவேல் கூறுகையில், "புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்திலுள்ள வழக்கறிஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமை இது. அரசு அனுப்பிய பணி நீட்டிப்பு தரும் கோப்பினை ஆளுநர் நிராகரித்துள்ளார். புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசின் கூடுதல் வழக்கறிஞர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களையும் புறக்கணித்துவிட்டு தமிழகத்தைச் சேர்ந்த மாலாவை புதுச்சேரி அரசு வழக்கறிஞராக தன்னிச்சையாக கிரண்பேடி நியமித்துள்ளார்.

இதன் மூலம் புதுச்சேரி வழக்கறிஞர்களின் உரிமை, வாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. இந்த உத்தரவை ஆளுநர் கிரண்பேடி ரத்து செய்து, புதுச்சேரியைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு வாய்ப்பு தர வேண்டும். உடனடியாக இதை நிறைவேற்றாவிட்டால் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கிரண்பேடிக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன் கூறுகையில், "சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்குப் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் போதிய அளவில் நியமிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், மேற்சொன்னபடி அரசு வழக்கறிஞர்கள் பதவிகளிலும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவது வழக்கறிஞர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். புதுச்சேரி அரசு உயர் நீதிமன்றத்திற்கு அரசு வழக்கறிஞர்களை நியமிக்கும்போது புதுச்சேரியைச் சேர்ந்தவர்களை மட்டுமே நியமிக்கும் வகையில் கொள்கை முடிவு எடுத்துச் செயல்படுத்த வேண்டும்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x