ஆரோக்கியமாக வாழ 5 அடிப்படை விஷயங்களை கடைபிடிப்பது அவசியம்: ‘இந்து தமிழ் திசை’ வழங்கிய ‘நலமாய் வாழ’ 4-ம் நாள் நிகழ்வில் ஆயுர்வேத மருத்துவர் கவுதமன் தகவல்

ஆரோக்கியமாக வாழ 5 அடிப்படை விஷயங்களை கடைபிடிப்பது அவசியம்: ‘இந்து தமிழ் திசை’ வழங்கிய ‘நலமாய் வாழ’ 4-ம் நாள் நிகழ்வில் ஆயுர்வேத மருத்துவர் கவுதமன் தகவல்
Updated on
1 min read

உணவு, உடற்பயிற்சி, உடற்கழிவு வெளியேற்றம், காயகல்ப சிகிச்சை,ஆரோக்கியத்தை பரிசோதித்துக் கொள்வது ஆகிய 5 அடிப்படை விஷயங்களை ஒழுங்காக கடைபிடித்தால் முழு ஆரோக்கியம், நீண்ட ஆயுளோடு வாழலாம் என்றுஆயுர்வேத மருத்துவர் கவுதமன் தெரிவித்தார்.

நமது பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, சித்தா, ஆயுர்வேதா, மர்மா தெரபி ஆகியவற்றின் பயன்களை அறிந்து, அதன் வழியாக நமது உடல் மற்றும் மன நலனைப் பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘நலமாய் வாழ’ எனும் இணைய வழி ஆலோசனை நிகழ்ச்சியை கடந்த 4 நாட்கள் நடத்தியது.

சாய்ராம் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ வழங்கியது. இந்த நிகழ்வின் நிறைவு நாளானநேற்று, ஆயுர்வேத மருத்துவம் பற்றிய ஆலோசனை வழங்கப்பட்டது. இதில், ஆயுர்வேத மருத்துவர் கவுதமன் பேசியதாவது:

உலக மருத்துவ முறைகளிலேயே தொன்மையான மருத்துவ முறை என்ற சிறப்புக்கு உரியது ஆயுர்வேத மருத்துவம். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆயுர்வேத மருத்துவம் மனித வாழ்வியலோடு இணைந்திருந்ததை ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர். நோயுற்றவர்களை குணப்படுத்துவது என்பதை விடவும், நோய் வராமல் தடுக்க என்ன செய்யவேண்டும் என்பதையே ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. உணவு, தூக்கம், ஓய்வு இவை மூன்றையும் முறைப்படுத்தி வாழ்ந்தாலே பல நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

அடிப்படையான 5 விஷயங்களை நாம் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. நமது உணவுமுறை, தியானம் - உடற்பயிற்சி, உடற்கழிவுகளை தினமும் காலையில் வெளியேற்றுதல், காயகல்ப சிகிச்சை,3 மாதத்துக்கு ஒருமுறை மருத்துவரை சந்தித்து ஆரோக்கியத்தைப் பரிசோதித்தல் என்கிற இந்த 5 நடைமுறைகளையும் நாம் ஒழுங்காக கடைபிடித்தால் முழு ஆரோக்கியம், நீண்ட ஆயுளோடு வாழலாம்.

தினமும் காலையில் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வதும், இரவு20 நிமிடங்கள் தியானம் செய்வதும்அவசியம். உணவில் காய்கறி, கீரை, பழங்கள், பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பசித்த பிறகே சாப்பிட வேண்டும். நோயுற்று இருப்பவர்கள் மருந்து, மாத்திரைகளை மட்டுமேநம்பி இருக்காமல், அவர்களுக்குநம் பாரம்பரிய வாழ்வியல் முறைகளை சொல்லித்தந்து, அதன்வழியே ஆரோக்கியம் அடையச் செய்வதே ஆயுர்வேத மருத்துவம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களது பல்வேறு கேள்விகள், சந்தேகங்களுக்கும் அவர் பதில் அளித்தார். கடந்த 4 நாட்களாக நடந்த ‘நலமாய் வாழ’ நிகழ்வு நேற்று நிறைவடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in