முழு ஊரடங்கு; மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

முழு ஊரடங்கு; மதுரை மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் போல் மதுரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டப்பட்டதால் அம்மாவட்ட மக்களுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று மதுரையிலும் முழு ஊரடங்கு இன்று நள்ளிரவு அமலாவதால் அம்மாவட்ட மக்களுக்கும் ரூ. 1000 நிவாரணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும், நோய்த்தொற்று நிலையைக் கருத்தில் கொண்டு, சென்னையில் அமல்படுத்தியதுபோல் 24.6.2020 அன்று அதிகாலை 12 மணி முதல் 30.6.2020 அன்று நள்ளிரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு சமயத்தில் ஏழை எளிய மக்களின் சிரமங்களைக் குறைக்க, சென்னையில் வழங்கியதுபோல் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் குடும்பத்திற்கு தலா 1,000 ரூபாய் வழங்கவும் அதைச் செயல்படுத்தும் விதமாக, வரும் 27.6.2020 முதல் சம்பந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணத்தை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in