Published : 24 Jun 2020 07:14 AM
Last Updated : 24 Jun 2020 07:14 AM

நாமக்கல்லில் பயோகாஸ் உற்பத்தி மையம்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் ரூ.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பயோகாஸ் உற்பத்தி மையம் மற்றும் நாமக்கல், சேலம், புதுச்சத்திரம், ராசிபுரம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பயோ காஸ் சில்லறை விற்பனை நிலையங்களை முதல்வர் பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோலியத் துறை செயலர், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பயோகாஸ் உற்பத்தி மையத்தின் இயந்திரத்தை தொடங்கி வைத்து முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் ஜெர்மனிநிறுவனங்களின் கூட்டு முயற்சிநிறுவனமான ஐஓடி உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி சேவைகள் நிறுவனம், நாமக்கல்லில் ரூ.34 கோடி செலவில் அமைக்கப்பட்டு, 2.4 மெகாவாட் திறன் கொண்ட பயோ காஸ் மின் உற்பத்தி செய்து வருகிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் பயோ காஸில் இருந்து கம்ப்ரஸ்டு பயோ காஸ் (சிபிஜி) தயாரிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைக்கு ரூ.25 கோடி செலவில் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் இப்புதிய தொழிற்சாலையில் தினசரி 15 டன் சிபிஜிமற்றும் 20 டன் உயிர் உரங்கள் தயாரிக்கப்படும். தமிழகம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் நிறுவுதிறன் 15 ஆயிரத்து 876 மெகாவாட்ஆகும். இதில், நீர்மின் நிலைய நிறுவுதிறன் 2,322 மெகாவாட், காற்றாலை 8,523 மெகாவாட், சூரிய ஒளி 4,054 மெகாவாட், தாவரக்கழிவு 266 மெகாவாட் மற்றும் இணை மின் உற்பத்தி நிறுவுதிறன் 711 மெகாவாட் ஆக உள்ளது.

எரிவாயு சுழலி மின்திட்டம்

தமிழகத்தில் எரிவாயு சுழலி மின்நிலையங்களின் மொத்த நிறுவுதிறன் மாநிலத்துக்கு சொந்தமான 516 மெகாவாட்டும், தனியாருக்கு சொந்தமான 497 மெகாவாட்டும் என 1,013 மெகாவாட்டாக உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய 2 கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின் திட்டத்தை சென்னையை சுற்றியுள்ள பகுதியில் நிறுவ தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.தங்கமணி, சரோஜா, தலைமைச் செயலர் கே.சண்முகம், மின்வாரிய தலைவர் பங்கஜ்குமார் பன்சால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x