Published : 24 Jun 2020 07:10 AM
Last Updated : 24 Jun 2020 07:10 AM

கரோனாவை கட்டுப்படுத்தும் 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்- ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘நலமாய் வாழ’ 3-ம் நாள் நிகழ்வில் சித்த மருத்துவர் கு.சிவராமன் பெருமிதம்

கு.சிவராமன்

சென்னை

உலகையே அச்சுறுத்தும் கரோனாவை கட்டுப்படுத்துவதில் 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர் முதல்கட்ட பயனைத் தந்துள்ளது என்று ‘இந்து தமிழ் திசை’ நடத்திய ‘நலமாய் வாழ’ நிகழ்ச்சியில் சித்த மருத்துவர் கு.சிவராமன் தெரிவித்தார்.

நமது பாரம்பரிய மருத்துவ முறைகளான யோகா, சித்தா, ஆயுர்வேதா, மர்மா தெரபி ஆகியவற்றின் பயன்களை அறிந்து, அதன் வழியாக நமது உடல், மன நலனைப் பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘நலமாய் வாழ’ எனும் இணைய வழி ஆலோசனை நிகழ்ச்சியை கடந்த 21-ம் தேதி முதல் நடத்தி வருகிறது.

சாய்ராம் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ வழங்குகிறது. இந்த நிகழ்வின் 3-ம் நாளான நேற்றுசித்த மருத்துவம் பற்றிய ஆலோசனை வழங்கப்பட்டது. இதில்ஹெல்த்கேர் சித்த மருத்துவமனை நிர்வாக இயக்குநர், மருத்துவர் கு.சிவராமன் பேசியதாவது:

3,500 ஆண்டுகளுக்கும் முந்தைய நமது தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவம் நமக்குகிடைத்திருக்கும் ஓர் அறிவுக்கொடை என்றே கூறலாம். மூலிகை,தாவரம், நவீன அறிவியல் முறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக சித்த மருத்துவம் உள்ளது. ‘அண்டமும் பிண்டமும் ஒன்றே’ என்பதை உணர்ந்து, மனித உடலுக்கும் இந்த பிரபஞ்சத்துக்குமான தொடர்பைக் கண்டறிந்து, இந்தப் பிரபஞ்சத்தின்ஒரு கூறாக மனித உடலை பார்த்ததுசித்த மருத்துவத்தின் சிறப்பாகும்.

உடல் செல்லின் இயக்கத்துக்கு துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, காரம்,கசப்பு, உவர்ப்பு எனும் அறுசுவைகளும் வேண்டும். நமது உடல்நிலை,வாழ்க்கைச் சூழல் ஆகியவற்றின் அடிப்படையில், தேவையின் அளவைப் பொறுத்து இவற்றை உட்கொள்ள வேண்டும். மனித உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய 7 தாதுக்களால் ஆனது. நாம் உண்ணும் உணவு இந்த 7 வகையான தாதுக்களுக்கும் கிடைக்கும்படி இருக்க வேண்டும்.

இன்றைக்கு உலகையே அச்சுறுத்தும் கரோனா வைரஸின் அறிகுறிகளாக நெஞ்சில் சளி சேருவது, காய்ச்சல், மூச்சு இரைப்பு போன்றவை உள்ளன. நிமோனியாநோய்க்கும் இதே அறிகுறிகள்தான் இருக்கும். அந்த வகையில், நிமோனியா போன்ற நோய்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கபசுர குடிநீர்தான் இதற்கும் சரியான மருந்தாக இருந்தது. 15 மூலிகைகள் அடங்கியகபசுர குடிநீர், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் முதல்கட்ட பயனைத் தந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களது கேள்விகள், சந்தேகங்களுக்கும் அவர் பதில் அளித்தார்.

இன்று நிறைவு

4-ம் நாள் மற்றும் நிறைவு நாளானஇன்று ஆயுர்வேத மருத்துவம் பற்றிடாக்டர் கவுதமன் விளக்க உள்ளார்.மாலை 5 மணி முதல் 6 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. https://connect.hindutamil.in/NalamaaiVaazhe.php என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x