சிறையில் தந்தை, மகன் மரணம்: தவறு செய்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை; ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
ஜி.கே.வாசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

கோவில்பட்டி கிளைச் சிறையில் தந்தை, மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, தவறு செய்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஜூன் 23) வெளியிட்ட அறிக்கை:

"தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் இறந்த செய்தி மிகவும் அதிர்ச்சிக்குரியது, வேதனைக்குரியது.

கரோனா தாக்கும் காலத்திலும் மக்களுடைய தேவைக்காக தனது செல்போன் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டு இருந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், இருவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்த செய்தி வியாபாரிகள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தையும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருதியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இனி இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாதவாறு அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும். தவறு செய்த காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். மேலும், வியாபாரிகளான தந்தை மகனும் ஒரே நேரத்தில் இறந்தவிட்ட காரணத்தால் பாதிக்கப்பட்ட அவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்இருவரையும் இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் வியாபார நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்"

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in