Published : 23 Jun 2020 04:02 PM
Last Updated : 23 Jun 2020 04:02 PM

மின் கட்டண அவகாசம் ; சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மட்டுமே: உயர் நீதிமன்றத்தில் மின்வாரியம் பதில்

சென்னை

மின் கட்டணம் செலுத்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளதாகவும், பிற மாவட்டங்களுக்கு இல்லை என உயர் நீதிமன்றத்தில் மின் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சி.ராஜசேகரன் என்பவர் மின் கட்டணம் கட்டுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கக்கோரி வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், “கரோனா நோய்த் தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பலர் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மார்ச் 31-ஆம் தேதி வரை உபயோகப்படுத்தப்பட்ட மின் கட்டணத்தை மே 6-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் மின் கட்டணம் செலுத்தாத பட்சத்தில் மின் இணைப்புத் துண்டிக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும் மின்கட்டணம் செலுத்த வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் செயல்படவில்லை. இதனால் மக்களின் பணப்புழக்கம் முற்றிலும் தடைபட்டுள்ளது.

இந்த நிலையில் மின் கட்டணத்தைச் செலுத்த உத்தரவிட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். எனவே மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் மின் இணைப்பைத் துண்டிக்க தடை விதிக்க வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் விசாரித்தனர். மனுதாரர் தரப்பில், “ பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களால் மின் கட்டணம் செலுத்த முடியவில்லை. அவர்கள் போதுமான வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்”. எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தரப்பில், “முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த ஜூலை 15 - ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த 4 மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் ஜூன் 15 -ஆம் தேதிக்குள் என்ற காலக்கெடுவுக்குள் 75 சதவீத நுகர்வோர் மின் கட்டணத்தை செலுத்தி விட்டதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து வழங்கமுடியாது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இருதரப்பு விரிவான வாதங்களுக்காக விசாரணையை ஜூன் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x