Last Updated : 23 Jun, 2020 02:37 PM

 

Published : 23 Jun 2020 02:37 PM
Last Updated : 23 Jun 2020 02:37 PM

'ஐஎன்எஸ் ஐராவத்' கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 198 பேர் தூத்துக்குடி வருகை

மாலத்தீவில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 198 பேருடன் இந்திய கடற்படை கப்பல் 'ஐஎன்எஸ் ஐராவத்' இன்று அதிகாலை தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேர்ந்தது.

மருத்துவ பரிசோதனை மற்றும் குடியுரிமை சோதனை முடிந்த பிறகு கப்பலில் வந்த அனைவரும் அரசு பேருந்துகளில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் 'ஆபரேசன் சமுத்திர சேது' திட்டத்தின் கீழ் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

அவ்வாறு இலங்கையில் இருந்து 713 இந்தியர்கள் கடந்த 2-ம் தேதியும், மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்கள் கடந்த 7-ம் தேதியும் இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக மாலத்தீவில் சிக்கியிருந்த மேலும் 198 இந்தியர்கள் இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் ஐராவத்' என்ற கப்பல் மூலம் இன்று தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டனர். மாலத்தீவில் உள்ள மாலே துறைமுகத்தில் இருந்து கடந்த 21-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கிளம்பிய இந்தக் கப்பல் இன்று அதிகாலை 2 மணியளவில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தை வந்ததடைந்தது. தொடர்ந்து கப்பலில் வந்த இந்தியர்கள் காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் கீழே இறக்கப்பட்டனர்.

இந்த கப்பலில் வந்த 198 பேரில் 195 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் மட்டும் புதுச்சேரியை சேர்ந்தவர்கள்.

இவர்களில் ஆண்கள் 188 பேர், பெண்கள் 7 பேர், ஆண் குழந்தைகள் 3 பேர் ஆவர். தமிழகத்தை சேர்ந்தவர்களை பொறுத்தவரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 64 பேர். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தலா 5 பேர். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 4 பேர் ஆவர். கப்பலில் வந்தவர்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.

கப்பலில் இருந்து இறங்கியவுடன் அனைவருக்கும் கரோனா அறிகுறிகள் இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் பேருந்துகளில் பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அங்கு சுங்க மற்றும் குடியுரிமை சோதனை முடிந்ததும் அரசு பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக வரும் 28-ம் தேதி ஈரானில் இருந்து ஒரு கப்பல் தூத்துக்குடி வருகிறது. இந்த கப்பலில் அந்நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் அழைத்துவரப்படவுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x