Last Updated : 23 Jun, 2020 02:24 PM

 

Published : 23 Jun 2020 02:24 PM
Last Updated : 23 Jun 2020 02:24 PM

புதுச்சேரியில் புதிதாக அரசு மருத்துவமனை செவிலியர் உட்பட 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி;  மேலும் ஒரு மூதாட்டி உயிரிழப்பு

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் புதிதாக அரசு மருத்துவமனை செவிலியர் உட்பட 19 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மூதாட்டி உயிரிழந்தார். இதனால் இறப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கையும் 400-ஐ கடந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று புதிதாக 19 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 402 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 228 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி உயிரிழந்தார். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 165 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜூன் 23) செய்தியாளர்களிடம் கூறும்போது, "புதுச்சேரியில் இன்று லாஸ்பேட்டை, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், சோரப்பட்டு, வில்லியனூர் ஆகிய பகுதியைச் சேர்ந்த 15 பேரும், காரைக்காலைச் சேர்ந்த 4 பேரும் என மொத்தம் 19 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 8 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், ஜிப்மர் மருத்துவமனையில் கடலூர் நபர் ஒருவர் உட்பட 7 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 பேர் காரைக்காலில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 402 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 228 ஆகவும் அதிகரித்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்ட 19 பேரில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் இறந்த முதியவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் பணிபுரிந்த செவிலியர் ஒருவருக்கு முதன் முறையாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு முதல் இரண்டு பரிசோதனைகள் 'நெகட்டிவ்' வந்த நிலையில் மூன்றாவது பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது. அதுபோல், அதே மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு வந்த ஆண் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் ஏற்கெனவே கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தனர்கள். காரைக்காலைச் சேர்ந்த 4 பேரும் சென்னைக்கு சென்று வந்தவர்கள்.

மேலும், முதலியார்பேட்டையைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் ஏற்கெனவே சளி, இருமல் காரணமாக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், அவர் நேற்று (ஜூன் 22) கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார். அவருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்ததில் 'பாசிட்டிவ்' என்று வந்துள்ளது. அவர் கரோனா தொற்று மற்றும் இதர நோய்களால் இறந்துள்ளார். இதனால் இறப்பு எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

இன்று கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் 12 பேரும், ஜிப்மர் மருத்துவமனையில் 4 பேரும் என 16 பேர் குணமடைந்து திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் இதுவரை 13 ஆயிரத்து 37 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதில் 12 ஆயிரத்து 526 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 104 பரிசோதனைகள் காத்திருப்பில் உள்ளன" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x