Published : 23 Jun 2020 07:09 AM
Last Updated : 23 Jun 2020 07:09 AM

சென்னையில் 1.20 லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன: ஒருங்கிணைப்பு பணியில் 400 ஆசிரியர்கள்

சென்னையில் கரோனா வைரஸ்பரவலை தடுக்கும் விதமாக 1.20லட்சம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் கரோனா தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியவர்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு 1 லட்சத்து 20 ஆயிரம் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் சுமார் 8 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், வெளியில் செல்வதை தடுக்கவும் 4,500தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

லேசான கரோனா அறிகுறி உள்ளவர்கள், அறிகுறி இல்லாமல் கரோனா தொற்று உள்ளவர்களை தங்கவைத்து சிகிச்சை அளிக்க 17 ஆயிரத்து 500 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சுமார் 8 ஆயிரம் படுக்கை வசதிகள் அண்ணா பல்கலைக்கழகம், சென்னை ஐஐடி உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட உள்ளன. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் 90 சதவீதமக்களின் நடமாட்டம் குறைந்துள்ளது. அதனால் இந்த ஊரடங்கு முடியும்போது சென்னையில் தொற்று பெரிய அளவில் குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளை கண்காணிக்க வார்டு அளவில் தன்னார்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். தன்னார்வலர்கள் முறையாக வீடுவீடாக சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனாரா என களத்துக்கு சென்று ஆய்வு செய்யவும், வார்டு அளவில் அனைத்து அலுவலர்களையும் ஒருங்கிணைக்கவும் மாநகராட்சி முழுவதும் உள்ள 200 வார்டுகளில் தலா 2 மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர்கள் வீதம் 400 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், தங்கள் ஆய்வு விவரங்களை மாநகராட்சியின் கரோனா தொடர்பான இணையதளத்தில் தினமும் பதிவேற்றவும் மாநகராட்சி உத்தர விட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x