Published : 22 Jun 2020 04:58 PM
Last Updated : 22 Jun 2020 04:58 PM

அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிரான புகார் மீது நடவடிக்கை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

தமிழக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணிக்கு எதிரான புகாரில் நடவடிக்கை கோரி வழக்குத் தொடரப்பட்டது. போதிய முகாந்திரம் இல்லை என அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழக வணிகவரித்துறை அமைச்சர் கே.சி வீரமணி, அரசு பொதுப்பணித்துறை ஒப்பந்தகரார் சேகர் ரெட்டியுடன் சேர்ந்து, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி தங்களது நிலத்தை அபகரித்துள்ளதாகவும், அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த ராமமூர்த்தி மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இது சம்பந்தமாக முதல்வருக்குப் புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரித்தார்.

அரசுத் தரப்பில் ஆஜரான மாநிலத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், மனுதாரர் புகார் குறித்து மேற்கொண்ட விசாரணையில் எந்த முகாந்திரமும் இல்லை எனத் தெரியவந்ததாகவும், இதுபோன்ற மனுவை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என்றும் வாதிட்டார்.

ஏற்கெனவே அமைச்சருக்கு எதிராக மனுதாரர் தனிப்பட்ட முறையில் நஷ்ட ஈடு கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கும் விதமாக, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x