Published : 22 Jun 2020 12:24 PM
Last Updated : 22 Jun 2020 12:24 PM

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% ஒதுக்கீடு கோரிய வழக்கு: ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்றம்

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக, அதிமுக, மதிமுக மற்றும் தமிழக அரசு தொடர்ந்துள்ள அனைத்து வழக்குகளும் வருகிற ஜூலை 9-ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்க கோரி திமுக, அதிமுக, பாமக, திராவிடர் கழகம் ஆகியவை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 22 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதேசமயம், மருத்துவ மேற்படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை எதிர் மனுதாரராக சேர்க்க மனுதாரர்கள் தரப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதே கோரிக்கையுடன் தமிழக அரசின் சுகாதார துறையும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்குகள் நீதிபதிகள் சுப்பைய்யா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் வகுத்த திட்டத்தின் அடிப்படையில், பட்டியலின மற்றும் பழங்குடியின வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கு ஜூலை 8 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் மத்திய அரசின் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஏற்கெனவே அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது எனவும், அந்த வழக்கில் மத்திய சுகாதாரத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மருத்துவ படிப்புகளில் அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம் எனவும், ஆனால், அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த வழக்குகள் இன்று (ஜூன் 22) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ராஜகோபால் ஆஜராகி, ஜூலை 8-ம் தேதி உச்ச நீதின்றத்தில் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், உச்ச நீதின்ற வழக்குக்கும் இதற்கும் தொடர்பு இல்லை, நீட் இல்லாதபோது தொடரப்பட்ட அந்த வழக்குக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, வழக்கு ஜூலை 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x