Published : 22 Jun 2020 11:31 AM
Last Updated : 22 Jun 2020 11:31 AM

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை விடுதலை; 5 பேரின் தூக்குத்தண்டனை ஆயுள்தண்டனையாக குறைப்பு; மேல்முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உடுமலை சங்கர் - கவுசல்யா: கோப்புப்படம்

சென்னை

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் 5 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைத்தும், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியை சேர்ந்த கவுசல்யாவும் காதலித்து 2015 ஆம் ஆண்டு சாதி மறுப்பு திருமணம் செய்தனர். இந்த திருமணத்திற்கு கவுசல்யாவின் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2016 மார்ச் 13-ம் தேதி உடுமலையில் சாலையில் பட்டப்பகலில் மனைவி கவுசல்யாவுடன் சென்ற சங்கர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக உடுமலைபேட்டை டி.எஸ்.பி. மேற்கொண்ட விசாரணையில் கவுசல்யாவின் குடும்பத்தினர் ஏற்பாட்டில் தான் படுகொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டது தெரிய வந்தது.

அதனடிப்படையில், கவுசல்யாவின் பெற்றோர், தாய்மாமன் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, திருப்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற எம்.மைக்கேல் ஆகிய 6 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஸ்டீபன் ராஜுக்கு ஆயுள் தண்டனையும், மணிகன்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்தது. மேலும், கவுல்சயாவின் தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, உறவினர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, மரண தண்டனையை உறுதி செய்ய கோரும் நடைமுறைப்படி, வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதேசமயம், மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உடுமலை காவல் துணை கண்கானிப்பாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டோரும் மேல்முறையீடு செய்தனர்.

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

இந்த அனைத்து வழக்குகள் மீது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் விரிவான விசாரணை நடத்தினர். அனைத்து தரப்பு விசாரணையும் முடிவடைந்த நிலையில், வழக்குகளின் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

அதன்படி, இன்று (ஜூன் 22) வழங்கப்பட்ட தீர்ப்பில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மேலும், ஜெகதீசன், பழனி எம்.மணிகண்டன், பி.செல்வக்குமார், தமிழ் என்கிற கலைதமிழ்வாணன், மதன் என்கிற மைக்கேல் ஆகிய 5 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள்தண்டனையாகவும் குறைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை உறுதி செய்தும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இதனால், விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், ஸ்டீபன் ராஜூக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை, மணிகண்டனுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x