Published : 21 Jun 2020 05:37 PM
Last Updated : 21 Jun 2020 05:37 PM

ராமேசுவரத்தில் 3 மணி நேரம் நீடித்த சூரிய கிரகணம்: 3 மாதங்களுக்கு பிறகு அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடிய திரளான பக்தர்கள்

ராமேசுவரம் கடற்கரைப் பகுதியில் 3 மணி நேரத்திற்கு மேல் சூரிய கிரகணம் நீடித்தது. கிரகணத்தை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடற்கரையில் பக்தர்கள் புனித நீராடினார்கள்.

சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் ஒரே நேரத்தில் வருவதே சூரிய கிரகணம் எனப்படும். அப்போது பூமி, சூரியன் ஆகிய இரண்டுக்கும் நடுவில் வரும் சந்திரன் சூரியனை பூமியில் இருந்து பார்க்க முடியாதபடி மறைக்கும்.

சூரிய கிரகணத்தை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் உள்ளுர் பக்தர்கள் காலை 10 மணியளவிலேயே திரண்டனர். காலை 10:22 மணியளவில் துவங்கி மதியம் 1:41 வரையிலும் நீடித்த சூரிய கிரகணத்தை பக்தர்கள் எக்ஸ்ரே பிலிமைக் கொண்டு ஆர்வத்துடன் பார்த்து ரசித்ததுடன் தங்களின் மொபைல் போன்களில் புகைப்படங்களும் எடுத்து மகிழ்ந்தனர்.

மேலும் கிரணத்தை முன்னிட்டு அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடினர். கடந்த மார்ச் 20-க்கு பிறகு ராமேசுவரம் அக்னிதீர்த்தக் கடற்கரையில் திரளான பக்தர்கள் நீராடினர்.

தொடர்ந்து ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு கிரகண பூஜையும் நடைபெற்றது. இந்த பூஜைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

முன்னதாக தமிழகத்தில் இது பகுதி அளவு சூரிய கிரகணம் மட்டுமே என்பதால் சுமார் 34% மட்டுமே சந்திரன் சூரியனை மறைத்து. இதனால் வடமாநிலங்களைப் போல வளைவு சூரிய கிரகணம் ராமேசுவரத்தில் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x