Published : 21 Jun 2020 03:45 PM
Last Updated : 21 Jun 2020 03:45 PM

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 37 பேருக்கு கரோனா சிகிச்சை

கோவில்பட்டியில் பங்குத்தந்தை, ஓவிய ஆசிரியர் உள்ளிட்ட 4 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி சீனிவாச நகரைச் சேர்ந்த 29 வயது இளைஞர் திண்டுக்கல்லில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்தார். உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 9-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் அனுமதியுடன் ஆம்புலன்ஸில் 10-ம் தேதி கோவில்பட்டிக்கு கொண்டுவரப்பட்டு, அதிகாரிகளின் முன்னிலையில், அந்த இளைஞர் மதத்தின்படி இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.

அந்த இளைஞரின் தாய், தந்தை மற்றும் அவரது மனைவிக்கு கடந்த 13-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 19-ம் தேதி அந்த இளைஞரின் பாட்டி, தாத்தா, அவர்களது வீட்டு கார் ஓட்டுநர், உறவினர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த இளைஞரின் இறுதிச் சடங்கில் பங்கேற்று பிரார்த்தனை நடத்திய பங்குத்தந்தைக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் பங்குத்தந்தை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும், ஓவிய ஆசிரியர் உள்ளிட்ட 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா பாதிப்பு காரணமாக 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x