Last Updated : 21 Jun, 2020 03:26 PM

 

Published : 21 Jun 2020 03:26 PM
Last Updated : 21 Jun 2020 03:26 PM

மாலத்தீவில் இருந்து 250 இந்தியர்களுடன் புறப்பட்டது 'ஐஎன்எஸ் அய்ராவத்' கப்பல்: நாளை மறுநாள் தூத்துக்குடி வந்து சேரும்

மாலத்தீவில் இருந்து 250 இந்தியர்களுடன் 'ஐஎன்எஸ் அய்ராவத்' கப்பல் இன்று பிற்பகல் கிளம்பியது. இந்தக் கப்பல் நாளை மறுநாள் (ஜூன் 23) அதிகாலை தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேருகிறது.

கரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் மத்திய அரசின் 'ஆபரேசன் சமுத்திர சேது' திட்டத்தின் கீழ் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.

அவ்வாறு இலங்கையில் இருந்து இம்மாதம் 2-ம் தேதி 713 இந்தியர்களும், மாலத்தீவில் இருந்து இம்மாதம் 7-ம் தேதி 700 இந்தியர்களும், கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் ஐலஸ்வா' கப்பல் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் மேலும் 250 இந்தியர்கள் 'ஐஎன்எஸ் அய்ராவத்' என்ற கடற்படை கப்பல் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்துவரப்படுகின்றனர்.

இந்தக் கப்பல் மாலத்தீவில் உள்ள மாலே துறைமுகத்தில் இருந்து இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளம்பியுள்ளது. இந்த கப்பல் நாளை மறுநாள் (ஜூன் 23) அதிகாலை தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேருகிறது. கப்பலில் இருந்து இந்தியர்கள் காலை 7 மணி முதல் பாதுகாப்பாக கீழே இறக்கப்படுகின்றனர்.

மருத்துவ பரிசோதனை மற்றும் குடியுரிமை, சுங்க சோதனைகள் முடிந்த பிறகு அவர்கள் அரசு பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டும் தூத்துக்குடி தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஈரானில் சிக்கித் தவிக்கும் 700 இந்திய மீனவர்களை அழைத்துக் கொண்டு 'ஐஎன்எஸ் ஐலஸ்வா' கப்பல் வரும் 28-ம் தேதி தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரவுள்ளது குறிப்பிடதக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x