

சட்டத்துறை அமைச்சரும் விழுப்புரம் எம்எல்ஏவுமான சி.வி.சண்முகத்திற்கு கரோனா தொற்று என இன்று சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை அவரது நேர்முக உதவியாளர் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நேர்முக உதவியாளர் ராஜாராமன் ஊடகங்களுக்குத் தெரிவித்த செய்தி:
''அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த சில தினங்களாக வழக்கமான உடல் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்ததினால் சென்னையிலேயே இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தனது திண்டிவனம் இல்லத்திற்குத் திரும்பிய அமைச்சர் தனது இல்லத்திலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் மீண்டும் உடல் பரிசோதனைக்காக சென்னைக்கு இன்று புறப்பட்டுச் சென்றார்.
இச்சூழலில் திட்டமிட்டு அமைச்சருடைய உடல்நிலை குறித்து தவறான வதந்திகளை விஷமிகள் பரப்பினர். கடந்து சில நாட்களுக்கு முன்பாக அவர் கரோனா பரிசோதனை செய்தபோது அவருக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என்று மருத்துவக் குறிப்பின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் தவறான தகவல்கள்''.
இவ்வாறு ராஜாராமன் தெரிவித்துள்ளார்.