Published : 21 Jun 2020 12:54 PM
Last Updated : 21 Jun 2020 12:54 PM

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கடும் ஊரடங்கு: அத்தியாவசியப் பணியிருந்தாலும் வெளியில் வர அனுமதி இல்லை

சென்னை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தளர்வு இன்றி கடும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என போலீஸார் அறிவித்திருந்த நிலையில், கடும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அத்தியாவசியத் தேவைகளுக்கு வெளியில் வந்தாலும் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று கடுமையாகப் பரவி வரும் வேளையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் இந்த 4 மாவட்டங்களுக்கு நோய்ப் பரவலைக் கருத்தில்கொண்டு இந்த 5-ம் கட்ட ஊரடங்கில், ஜூன் 19-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை சிறு தளர்வுடன் கூடிய முழு ஊரடங்காக அறிவிக்கப்பட்டது.

இதில் ஞாயிற்றுக் கிழமைகளான 21.06.2020 மற்றும் 28.06.2020 ஆம் தேதிகளில் தளர்வு இன்றி கடும் ஊரடங்காகக் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் கடும் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்திருந்தது.

* மருத்துவத் தேவை தவிர பிற தேவைக்காக வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.

*காய்கறி, மளிகைக் கடைகள், நடமாடும் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்.

*உணவகங்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் இயங்க அனுமதி கிடையாது.

முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க வாகனங்களைப் பயன்படுத்தாமல் நடந்து செல்ல வேண்டும், வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே, 2 கி.மீ. சுற்றளவு தொலைவிற்குள் மட்டும் சென்று பொருட்களை வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு அதை மீறிச் செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முழு ஊரடங்கினை முழுமையாக அமல்படுத்த, சென்னை பெருநகரில் 288 இடங்களில் சோதனைச்சாவடி (Check Post) அமைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களில் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட்டு வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது. முகக்கவசம் இல்லாமல் வெளியில் வருபவர்களும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தளர்வு இன்றி இன்றைய ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமலாகிறது. இன்று அத்தியாவசியத் தேவைகளுக்குக்கூட பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என ஏற்கெனவே அறிவுறுத்தியபடி சென்னை முழுவதும் போலீஸார் கடும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்விதக் கடைகளும் திறக்கக்கூடாது, மருத்துவச் சேவை அன்றி எதற்கும் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீஸார் பொதுமக்கள் வசிக்கும் உட்புறப் பகுதிகளிலும் சோதனையிட்டு அறிவுறுத்தி வருகின்றனர். மீறி வெளியே வரும் பொதுமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

சென்னையில் பல இடங்களில் பொதுமக்கள் சைக்கிளில் வெளியே சுற்றினர். அவர்களது சைக்கிளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் 14 நாட்களுக்குப் பின்னரே திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x