Published : 19 Jun 2020 08:15 PM
Last Updated : 19 Jun 2020 08:15 PM

தமிழகத்தில் 2,115 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 1,322 பேர் பாதிப்பு; 35 மாவட்டங்களில் தொற்று 

சென்னை

தமிழகத்தில் இன்று 2,115 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 54,449 அதிகரித்துள்ளது. சென்னையில் 1,322 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை தொற்று எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது.

2,115 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 62.5 சதவீதத் தொற்று சென்னையில் (1,322) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 54,449-ல் சென்னையில் மட்டும் 38,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 70.3 சதவீதம் ஆகும்.

30,271 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 55.5 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, மற்ற மாநிலங்களின் ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 54 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 54 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைத் தொட்ட நிலையில், இன்று சென்னையும் 38 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 40 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 2,32,309.

சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழகத் தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 666 பேரில் சென்னையில் மட்டுமே 529 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 79.4 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 38,327-ல் 529 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 1.3 % ஆக உள்ளது.

இதனால் சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதியில் நீண்ட நாள் நோய், சர்க்கரை, நீரிழிவு போன்ற நோயுள்ளவர்கள், வயதானவர்களைக் கண்டறிந்து 7 நாட்கள் அரசு முகாமில் தங்கவைக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், சென்னையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.சென்னையில் இன்று முதல் முழு ஊரடங்கு போடப்பட்டு பொதுமக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். இன்றும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் வீடு வீடாக சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 680 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது.

அகில இந்திய அளவில் மகாராஷ்டிரா ஒரு லட்சத்தைக் கடந்து 1.25 லட்சத்தை நோக்கிச் செல்கிறது. அங்கு 1,20,504 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 54,449 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 49,979 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. குஜராத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 25,601 ஆக உள்ளது.

சென்னையைத் தவிர மீதியுள்ள 34 மாவட்டங்களில் 793 பேருக்குத் தொற்று உள்ளது. 2 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையில் 5 மண்டலங்கள் 3,000 என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது. ராயபுரம் மண்டலம் 6000 என்ற எண்ணிக்கையை நோக்கிச் செல்கிறது.

* தற்போது 45 அரசு ஆய்வகங்கள், 38 தனியார் ஆய்வகங்கள் என 83 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 30,271.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 8,27,980.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 27,537.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 7.6 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 54,449.

* மொத்தம் (54,449) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 33,520 (61.5%) / பெண்கள் 20,909 (38.4%)/ மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் ( .05 %)

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 2,115.

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,279 (60.4.8%) பேர். பெண்கள் 826 (39.2%) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,630 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 30,271 பேர் (55%).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 41 பேர் உயிரிழந்தனர். இதில் 15 பேர் தனியார் மருத்துவமனையிலும், 26 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 666 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 529 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரணங்கள் சதவீதம் அதிக அளவில் உள்ளது. 50 வயதுக்கு உட்பட்டோர் 9 பேர் ஆவர். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 3 பேர். முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,322 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்துள்ளது. சென்னையின் மொத்த எண்ணிக்கை தமிழகத்தின் மொத்த மாவட்ட எண்ணிக்கையை விட அதிகம்.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 70.3 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 29.7 சதவீதத்தினர் உள்ளனர்.

தமிழகத்தில் 35 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 3,432, திருவள்ளூர் 2,291, கடலூர் 647, திருவண்ணாமலை 853, காஞ்சிபுரம் 1,001, அரியலூர் 407, திருநெல்வேலி 584, விழுப்புரம் 528, மதுரை 550, கள்ளக்குறிச்சி 364, தூத்துக்குடி 529, சேலம் 280, கோவை 244, பெரம்பலூர் 147, திண்டுக்கல் 272, விருதுநகர் 179, திருப்பூர் 119, தேனி 185, ராணிப்பேட்டை 409, திருச்சி 207, தென்காசி 210, ராமநாதபுரம் 245, வேலூர் 354, தஞ்சாவூர் 213, கன்னியாகுமரி 151, நாகப்பட்டினம் 191, திருவாரூர் 186, கரூர் 103 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

37 மாவட்டங்களில் 23 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 3 மாவட்டங்கள் 4 இலக்கத்தைத் தாண்டியுள்ளன. சென்னை 5 இலக்கத்தைத் தாண்டியுள்ளது. 35 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது. மற்ற 2 மாவட்டங்களில் தொற்று இல்லை. மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 40 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 2,428 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 2,701 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 1,399 பேர் (51.7 %) . பெண் குழந்தைகள் 1,302 பேர் (48.3 %).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 45,299 பேர் (83.1 %). இதில் ஆண்கள் 28,132 பேர். (62.1%) பெண்கள் 17,147 பேர் (37.8 %). மூன்றாம் பாலினத்தவர் 20 பேர் (.04 %).

60 வயதுக்கு மேற்பட்டோர் 6,449 பேர் (11.8 %). இதில் ஆண்கள் 3,989 பேர் (61.8%). பெண்கள் 2,460 பேர் (38.2%).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x