Published : 19 Jun 2020 01:50 PM
Last Updated : 19 Jun 2020 01:50 PM

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு: ஆர்.எஸ்.பாரதி முன்ஜாமீன் மனு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் திமுக மாணவரணி சார்பில் நடந்த உள்கூட்டக் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பட்டியல் இனத்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், மே மாதம் ஆர்.எஸ்.பாரதி இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கில் ஜூன் 1-ம் தேதி சரணடைந்த ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி மத்திய குற்றப் பிரிவுத் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவில், கடும் நிபந்தனைகள் ஏதும் விதிக்காமல் ஆர்.எஸ். பாரதிக்கு அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளதாகவும், தொற்று நோய் பரவலைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது. கரோனா வைரஸ் காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாக ஆர்.எஸ்.பாரதி கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சை மறுத்தால் அதை நிரூபிக்க அவரது குரல் மாதிரியை எடுக்க வேண்டும் என்பதால், அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளதால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

குறிப்பிட்ட சமுதாய மக்களை மட்டும் அவர் களங்கப்படுத்தவில்லை என்றும், உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் தரக்குறைவாகப் பேசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.பாரதி தரப்பில், ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டதாகவும், ஜாமீனை ரத்து செய்ய எந்தக் காரணமும் இல்லை என்றும், விரோதப் போக்குடன் மாநில அரசு தற்போது இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.

ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென புகார்தாரர் கல்யாணசுந்தரம் தரப்பிலும் வாதிடப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், காவல்துறை தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும் எனக் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், சிபாரிசு இருந்தால் யார் வேண்டுமானலும் நீதிபதி ஆகிவிடலாம் என்பதைப் போல் ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு உள்ளதாகச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதுபோன்ற வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என அவருக்குத் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்துமாறு ஆர்.எஸ்.பாரதியின் வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

பின்னர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மத்திய குற்றப் பிரிவின் மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x