Published : 19 Jun 2020 01:00 PM
Last Updated : 19 Jun 2020 01:00 PM

தனியார் பள்ளி, கல்லூரிகள் கட்டண வசூல் நெருக்கடி: அரசின் உத்தரவை அமல்படுத்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு 

கரோனா தொற்று ஊரடங்கு காலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்கிற உத்தரவையும் மீறி பெற்றோர்களிடம் கட்டணம் கேட்டு நெருக்கடி தரும் தனியார் பள்ளி, கல்லூரிகள் குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 5 ஆம் கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள், கல்லூரிகள், கட்டணத்தைச் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திப்பதாக கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “கரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதேபோல மத்திய அரசும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில், பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த உத்தரவுகள் அமல்படுத்தப்படவில்லை.

ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து பாதிக்கப்பட்ட பெற்றோரிடம், கட்டணங்களைச் செலுத்தும்படி தனியார் பள்ளி - கல்லூரிகள் நெருக்கடி கொடுப்பது குறித்து புகார்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஊரடங்கு காலத்தில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என பஞ்சாப், டெல்லி, அசாம், மகாராஷ்டிர மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. ஆனால் இங்கு தனியார் பள்ளி, கல்லூரிகள் அதிக கட்டணத்தைச் செலுத்தக் கூறுகின்றன. அதன் காரணமாக கட்டண விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றவில்லை.

தனியார் பள்ளி, கல்லூரிகள் கட்டணங்கள் வசூலிக்கக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x