Published : 18 Jun 2020 01:15 PM
Last Updated : 18 Jun 2020 01:15 PM

நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளில் முறைகேடு: முதல்வருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்றார் ஆர்.எஸ்.பாரதி

தஞ்சாவூரில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்கான டெண்டரில் முறைகேடு நடந்ததாக முதல்வர் பழனிசாமி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்திருந்த வழக்கை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று வாபஸ் பெற்றார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் 462 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலைகள் விரிவாக்கத்துக்கு 1,165 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ''வழக்கமாக ஆண்டுதோறும் டெண்டர் பிறப்பிக்கப்படும். ஆனால் இந்த டெண்டர் ஐந்து ஆண்டுகளுக்குக் கோரப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் டெண்டர் கோரும்போது ஓராண்டுக்கு 100 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும். அந்த வகையில் 500 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும். தற்போது 800 கோடி ரூபாய் வரை அதிக செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்ததாரர்கள் டெண்டர் ஆவணங்களைச் சமர்ப்பிக்க இயலாத நிலையில், துறை அமைச்சரான முதல்வருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரிடர் காலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சாலை அமைக்க டெண்டர் கோரி முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்தப் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும்'' என ஆர்.எஸ்.பாரதி கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, டெண்டரிலேயே யாரும் பங்கேற்காதபோது ஊழல் நடந்துள்ளதாகவும், அரசியல் காரணங்களுக்காகவும் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆர்.எஸ்.பாரதி புகார் குறித்து விசாரணை மேற்கொண்டதாகவும், டெண்டர் நடைமுறை முடிக்கப்படாத நிலையில் அதில் முறைகேடு நடந்திருப்பதாக வழக்குத் தொடர்ந்துள்ளதாகவும், புகாரில் முகாந்திரம் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத் துறை முடிவெடுத்து விட்டதாகவும், புகாரை முடித்து வைத்தது குறித்து ஆர்.எஸ்.பாரதிக்கும் தகவல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதி சதீஷ்குமார், டெண்டரே ஒதுக்காதபோது எப்படி ஊழல் குற்றச்சாட்டைச் சுமத்த முடியுமென கேள்வி எழுப்பியதுடன், வழக்கை வாபஸ் பெறுவதே முறையாக இருக்கும் என அறிவுறுத்தினர்.

இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி தரப்பிடம் பேசி முடிவைச் சொல்வதாக வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதன்பேரில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று, தன் வழக்கை வாபஸ் பெறுவதாக ஆர்.எஸ்.பாரதி தரப்பில் விளக்கமளித்ததால் வழக்கை முடித்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x