Published : 18 Jun 2020 07:07 AM
Last Updated : 18 Jun 2020 07:07 AM

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடுமையாக்கப்படும்- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன்மாளிகை வளாகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று நடைபெற்றது. அதில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது:

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 3 ஆயிரத்து 387 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் 2 லட்சத்து 8 ஆயிரத்து 530 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 5 ஆயிரத்து 598 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சி மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 12 ஆயிரம் களப்பணியாளர்கள் தினந்தோறும் வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர். இதுவரை 18 லட்சம் குடும்பங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

குடிசைவாழ் மக்களிடையே வைரஸ் பரவலைத் தடுக்க, தொற்றால் பாதிக்கப்பட்டோர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களை தங்கவைக்க 25 ஆயிரம்படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டு, தற்போது 2 ஆயிரத்து 500 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “19-ம் தேதி (நாளை) தொடங்கும் முழு ஊரடங்கு மிகவும் கடுமையாக இருக்கும். வைரஸ் பரவாமல் தடுக்க இந்த முழுஊரடங்குக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேசும்போது, “சென்னையில் ஒரு நாளில் தொற்று குறைவதை வைத்து, தொற்று குறைந்து வருவதாகக் கருத முடியாது. தொடர்ந்து குறைந்து வந்தால் மட்டும் அவ்வாறு கருத முடியும்” என்றார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், கே.பாண்டியராஜன், ஆர்.காமராஜ், சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி பங்கஜ்குமார் பன்சால், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x