Published : 17 Jun 2020 10:04 PM
Last Updated : 17 Jun 2020 10:04 PM

12 நாள் முழு ஊரடங்கில் பொதுமக்கள் என்னென்ன செய்ய வேண்டும்: போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை அறிவிப்பு

ஜூன் 19 நள்ளிரவு முதல் முழு ஊரடங்கின்போது பொதுமக்கள் அத்யாவசிய தேவையின்றி வாகனங்களில் சுற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, மீறி சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

“பெருநகரக் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஜூன் 19 இரவு 12.00 மணி முதல் 30.06.2020 இரவு 12.00 மணி வரையிலான 12 நாட்களுக்குத் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. மருத்துவமனைகள் மருத்துவ பரிசோதனை கூடங்கள் மருந்தகங்கள் ஆம்புலன்ஸு மற்றும் அமரர் ஊர்தி சேவைகளின் போக்குவரத்திற்கு அனுமதி உண்டு.

மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனம் ஆட்டோ கால்டாக்சி உபயோகம் அனுமதிக்கப்படும். இதைத்தவிர பிற காரணங்களுக்காக வாடகை ஆட்டோ கால்டாக்சி மற்றும் தனியார் வாகனங்கள் இயங்க அனுமதி இல்லை.

அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் வாகனங்களைப் பயன்படுத்தாமல் தாங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே அதாவது 2 கி.மீ. தொலைவிற்குள் மட்டும் நடந்து சென்று பொருட்களை வாங்கிக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் பிற தேவைகளுக்கு வாகனங்களில் செல்வது முற்றிலுமாகத் தடைசெய்யப்படுகிறது.

தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் ஊழியர்கள் தங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து உரிய அடையாள அட்டைகளைப் பெற்று வாகனங்களில் செல்லுதல் வேண்டும்.

இந்த ஊரடங்கின்போது சரக்கு வாகனப் போக்குவரத்திற்கும் தண்ணீர், பால், பெட்ரோல், கேஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் நிறுவனத்திடமிருந்து உரிய அடையாள அட்டை, அனுமதி சீட்டு மற்றும் உரிய ஆவணங்களைப் பெற்று வாகனங்களை செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

20.06.2020 முதல் 26.06.2020 வரை காலை 10.00 முதல் மதியம் 2 மணி வரை வங்கிகள் சார்ந்த வாகனங்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் தங்களது வங்கியின் அடையாள அட்டையை காண்பித்து வாகனங்களில் செல்லுதல் வேண்டும்.
21.06.2020 மற்றும் 28.06.2020 ஆகிய ஞாயிற்று கிழமைகளில் எவ்விதத் தளர்வும் இன்றி முழு ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இரு நாட்களிலும் பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர வேறு எவ்விதமான வாகனப் போக்குவரத்திற்கும் அனுமதி கிடையாது.

அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே தனியார் வாகனங்கள், ஆட்டோ, கால் டாக்ஸிகள் உபயோகம் அனுமதிக்கப்படும். அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களும் மற்றும் அடையாள அட்டை வைத்திருப்பவர்களும் தங்களது அனுமதி மற்றும் அடையாளச் சீட்டுக்களைப் பெர்ய அளவில் (A5 (148mmX210mm)) அளவுக்கு) பிரதி எடுத்து வைத்திருக்க வேண்டும். விமானம் மற்றும் ரெயில் பயணியர் தங்களது பயணச்சீட்டுக்களை வைத்திருக்க வேண்டும். வாகன சோதனையின்போது போக்குவரத்துக் காவல்துறையினருக்குத் தெளிவாகத் தெரியும்படி காட்டுதல் வேண்டும்.

எவ்விதமான அனுமதி சீட்டுமின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது கடுமையான காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என போக்குவரத்துக் காவல் துறையினரால் எச்சரிக்கப்படுகிறது. அதேபோல் போலியான அனுமதிச் சீட்டுகளை வைத்து வாகனங்களை இயக்குவது கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டம் 144 பிரிவின்படி கடுமையான காவல்துறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறார்கள்.

முதியோர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்களில் தங்கியிருக்கும் முதியோர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உதவி புரிவோர் மற்றும் அரசு, தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும் வாகன அனுமதி வழங்கப்படும். இவர்கள் அரசின் tnepass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.

வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியவும் சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடிக்கவும், அவசியத் தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே செல்வதைத் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்கவும் போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் போக்குவரத்துக் காவல் துறையின் கட்டுப்பாட்டு அறை எண்கள் 044-23452330 , 044-23452362 அல்லது 90031 30103 எனும் எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம்”.

இவ்வாறு போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x