Published : 17 Jun 2020 02:29 PM
Last Updated : 17 Jun 2020 02:29 PM

மதுரையில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் 804 இடங்களில் கை கழுவும் வசதி: மாநகராட்சி ஏற்பாடு 

மதுரை மாநகராட்சிப்பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள கை கழுவும் வசதி. 

மதுரை

மதுரையில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் உட்பட 804 இடங்களில் கை கழுவும் வசதிகளை மாநகராட்சி ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு புறம் ‘கரோனா’ பரவினாலும் மற்றொரு புறம் இந்தத் தொற்று நோயை தடுக்க மாநகராட்சி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பொதுமக்களை முகக்கவசம் அணிய வைத்தல், அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தல், சமூக இடைவெளியினை கடைப்பிடித்தல், கடைபிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைத்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

‘கரோனா’ வைரஸ் பரவுவதைத் தடுக்க அடிக்கடி கைகழுவுதல், கிருமி நாசினியைக் கொண்டு கையை சுத்தம் செய்தல் போன்றவற்றை சுகாதாரத்துறை முக்கியமாக விழிப்புணர்வாக சொல்லி வருகிறது.

மதுரை மாநகராட்சியில் அரசு, தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலான இடங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் வருகை புரிபவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் வாஷ்பேசின்களில் திரவ சோப்பு கரைசல் அல்லது கைகழுவும் சோப்பு வைக்கப்பட வேண்டும் என்று மாநகராட்சி கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளது.

தற்போது அந்த உத்தரவு அடிப்படையில் மாநகராட்சியில் பொதுமக்கள் வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பொதுஇடங்களில் அந்நிறுவனங்களும், மாநகராட்சியும் இணைந்து 804 இடங்களில் கைகழுவும் வசதிகளை ஏற்படுத்தி உள்ளன.

மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘தனியார் நிறுவனங்கள், கைகழுவும் வசதி ஏற்படுத்தாதபட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் கொள்ளை நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 1-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 36 மாநகராட்சி அலுவலக கட்டிடங்களிலும், 58 அரசு அலுவலக கட்டிடங்களிலும், 175 தனியார் கட்டிடங்களிலும் என 269 இடங்களிலும் கைகழுவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

2-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 49 மாநகராட்சி அலுவலக கட்டிடங்களிலும், 26 அரசு அலுவலக கட்டிடங்களிலும், 76 தனியார் கட்டிடங்களிலும் என 151 இடங்களிலும், 3-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 25 மாநகராட்சி அலுவலக கட்டிடங்களிலும், 12 அரசு அலுவலக கட்டிடங்களிலும், 110 தனியார் கட்டிடங்களிலும் என 147 இடங்களிலும், 4-வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள 59 மாநகராட்சி அலுவலக கட்டிடங்களிலும் 25 அரசு அலுவலக கட்டிடங்களிலும், 153 தனியார் கட்டிடங்களிலும் என 234 இடங்களிலும் என மொத்தம் 804 இடங்களில் கைகள் கழுவுவதற்கு வாஷ்பேசின் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள், இந்த கட்டிடத்திற்குள் நுழையும் முன்பும் வெளியில் செல்லும் முன்பும் கைகளை கழுவிய பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x