Published : 17 Jun 2020 12:26 PM
Last Updated : 17 Jun 2020 12:26 PM

முதல்வருக்கு ராஜேந்திர பாலாஜி சூட்டும் புகழாரங்கள் இழந்த பதவியை மீட்க பயன்படலாமே தவிர மக்களைக் காப்பாற்றப் பயன்படாது; திமுக முன்னாள் அமைச்சர்கள் விமர்சனம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: கோப்புப்படம்

சென்னை

முதல்வர் பழனிசாமிக்கு ராஜேந்திர பாலாஜி சூட்டும் புகழாரங்கள் எல்லாம் அவரது இழந்த பதவியை மீட்டுத்தரப் பயன்படலாமே தவிர, மக்களைக் காப்பாற்றப் பயன்படாது என, முன்னாள் திமுக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, விருதுநகர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களும் முன்னாள் அமைச்சர்களுமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்எல்ஏ மற்றும் தங்கம் தென்னரசு எம்எல்ஏ ஆகியோர் இன்று (ஜூன் 17) வெளியிட்ட கூட்டறிக்கை:

"முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பத்திரிகை பேட்டிகளில் அவ்வப்போது தனது வீராவேசத்தைக் காட்டி எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரால் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, ராஜேந்திர பாலாஜியின் முகத்தில் கரி பூசப்பட்ட பிறகு மூன்று மாத காலமாக ஆளும்கட்சியினரால் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டார். இழந்த பதவியை மீண்டும் பெறலாமா என்ற ஆசையில் இப்போது எடப்பாடி பழனிசாமியை வானளாவப் புகழ்ந்தும், திமுகவை விமர்சித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கரோனா முதலில் பலி வாங்கியதே ராஜேந்திர பாலாஜியின் பதவியைத்தான் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறோம். 'நாட்டு மக்களைப் பழிவாங்குவதற்குத்தான் கரோனா வந்துள்ளது' என்ற பொருளில் மார்ச் 22-ம் தேதி போட்ட ட்விட்டர் பதிவைப் பார்த்து, அன்று மாலையே அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. அதனால் கரோனா மீது அதிகமான ஆத்திரத்தில் ராஜேந்திர பாலாஜி இருப்பது அவரது அறிக்கை மூலமாகத் தெரிகிறது.

தங்கம் தென்னரசு - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: கோப்புப்படம்

பொதுவாக ராஜேந்திர பாலாஜி எவ்வகை மனிதர் என்பது நாட்டு மக்களுக்கு நன்கு தெரியும். இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்குப் போட வேண்டுமானால் எல்லாப் புகாருக்கும் உள்ளாகக் கூடியவர் அவர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் தமிழக அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் போதே நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கினைச் சந்தித்து கொண்டிருக்கும் அமைச்சர் அவர். அத்தகைய மனிதர் அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் அவரது அறிக்கைக்குப் பதில் சொல்லியாக வேண்டியுள்ளது.

கரோனா ஒழிப்பில் இந்தியாவே தமிழகத்தைப் பாராட்டுகிறதாம். இந்தியாவே பாராட்டுகிறது என்றால் யார் பாராட்டுவது என்று சொல்ல வேண்டாமா? தமிழகத்தில் மொத்தம் இன்றுவரை 48 ஆயிரம் பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்திய அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு, இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அதன்பிறகு தான் மற்ற மாநிலங்கள் இருக்கின்றன.

தமிழகத்தில் இதுவரை 528 உயிர்களை இழந்திருக்கிறோம். இந்திய அளவில் பலியானோர் எண்ணிக்கையில் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தை அடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கிறது தமிழகம். இதுதான் இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றிய லட்சணமா?

இறப்பு விகிதத்தைக் குறைத்தோம் என்று சொல்லிக்கொள்வது பெருமை அல்ல; மரணத்தை மறைத்துள்ளீர்கள் என்பதைத்தான் தினமும் ஊடகங்கள் அம்பலப்படுத்தி உள்ளதே!

மக்கள் நல்வாழ்வுத் துறை தரும் புள்ளிவிவரமும் சென்னை மாநகராட்சி தரும் கணக்கும் ஒப்பிட்டுப்பார்த்தால் பொய்க்கணக்கு என்பதை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளராக இருந்தவரே மறைமுகமாக ஒப்புக்கொண்டு அதனை விசாரிப்பதற்கு குழுவும் நியமித்த காரணத்தால் மாற்றப்பட்டதை தமிழகம் பார்த்தது.

ஜனவரி மாதமே தடுப்புப் பணியைத் தொடங்கிவிட்டோம் என்று சட்டப்பேரவையில் பொய் சொல்லியும், இது எல்லாருக்கும் வராது என்று 'மாய்மாலம்' காட்டியும் நாட்டு மக்களை ஏய்த்தவர் எடப்பாடி பழனிசாமி. அவரது செயலற்ற நிலைக்கு தமிழ்நாடு இதுவரை கொடுத்துள்ள விலை 528 உயிர்கள். 48 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட கொடூரமான நிலைமை. இதை எல்லாம் மறைப்பதற்காக நித்தமும் ஒரு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

சட்டப்பேரவையை ஒத்திவைக்கச் சொன்ன திமுக தலைவர், அதே நாளன்று வடசென்னையில் 2 ஆயிரம் பேர் பங்கேற்ற போராட்டத்தில் கலந்துகொண்டார் என்கிறார் ராஜேந்திர பாலாஜி. திமுக தலைவர் அந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளச் செல்லவில்லை. 'கரோனா நோய்ப் பரவிவருவதால் உங்களது போராட்டத்தை ஒத்திவையுங்கள்' என்று மக்களிடம் கோரிக்கை வைக்கத்தான் சென்றார். அது அவரது உரையில் இருக்கிறது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களைப் பரிசோதிக்காமலும், கோயம்பேடு சந்தையைத் திறந்து வைத்தும், ஊரடங்கு என்று சொல்லி தளர்வுக்கு மேல் தளர்வுகள் அறிவித்தும், மதுபானக் கடைகளைத் திறந்தும், தவறுக்கு மேல் தவறு செய்ததும் தான் இந்த நோய்ப்பரவலுக்கு மிக முக்கியமான காரணம். இதற்கு முழுப்பொறுப்பு ஏற்க வேண்டியது ஆளும் கட்சியும் முதல்வரும், அமைச்சர்களும் தானே தவிர வேறு யாருமல்ல.

வெள்ளந்தி முதல்வராம். விவசாயிகளின் தோழராம். நல்லாட்சிக்கு இலக்கணம் வகுத்தவராம். விருதுகள் பெற்றவராம். ஜெயலலிதாவின் தொண்டராம். எடப்பாடி பழனிசாமிக்கு புகழாரங்களைச் சூட்டுகிறார் ராஜேந்திர பாலாஜி. இவை எல்லாம் ராஜேந்திர பாலாஜியின் இழந்த பதவியை மீட்டுத்தரப் பயன்படலாமே தவிர, மக்களைக் காப்பாற்றப் பயன்படாது.

'ஒன்றிணைவோம் வா' திட்டத்தைக் குறை சொல்கிறார் ராஜேந்திர பாலாஜி. ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களை அரசாங்கம் அல்லவா கொடுத்திருக்க வேண்டும். மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குத்தானே இருக்கிறது. இந்தக் கடமையைச் செய்யத் தவறியது அதிமுக அரசு.

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை, பொறுப்பை ஒரு எதிர்க்கட்சி செய்திருக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு மளிகைப் பொருட்களும், காய்கறிகளும், நிதி உதவியும், உணவும் திமுக கொடுக்கிறதே என்ற எண்ணமாவது இந்த அரசுக்கு வந்திருக்க வேண்டும்.

திமுக செய்வதை எல்லாம் நாங்கள் தருகிறோம் என்று முன்வந்திருக்க வேண்டும். ஆனால், முதல்வரில் இருந்து அமைச்சர்கள், ஆளும்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் வரை பதுங்குக் குழிக்குள் பதுங்குவதைப் போல வீட்டுக்குள் முடங்கிவிட்டார்கள்.

ஏழைகளின் அழுகுரல், அப்பாவிகளின் கண்ணீர், வாழ்வாதாரம் இழந்தவர் ஓலம் இவர்களது கல் நெஞ்சைக் கரைக்கவில்லை. இன்னும் சொன்னால், ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் துயரத்தைக் கூட இவர்கள் துடைக்கவில்லை.

'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலமாக சாதி, மதம் பார்க்காமல் மட்டுமல்ல, கட்சி பேதம் பார்க்காமல் எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்தக் கரோனா காலத்தில் களப்பணி ஆற்றி இருக்கிறார். லட்சக்கணக்கான குடும்பங்களின் கண்ணீர் துடைத்திருக்கிறார். இது பலனைப் பெற்ற மக்களுக்கும் தெரியும். பலன் பெற்றவர்களை அறிந்த கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களுக்கும் தெரியும். எனவே, ராஜேந்திர பாலாஜி போன்ற மனிதர்களின் நற்சாட்சிப் பத்திரம் கேட்டு நிற்கவில்லை திமுக.

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டியதை திமுக செய்கிறது. ஒரு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் கட்டளையிடுகிறார். இது மக்களுக்கு நன்கு தெரியும்.

எங்கள் இயக்கத்தின் ஜெ.அன்பழகன் இறப்பையும் கொச்சைப்படுத்துவதை இனிமேலாவது ஆளும்கட்சியினர் நிறுத்த வேண்டும். 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் நாள் ஜெயலலிதா இறந்து போனார். அவர் இறப்பில் சந்தேகம் கிளப்பியவர் இன்றைய துணை முதல்வர் பன்னீர்செல்வம். அமைச்சர் விஜயபாஸ்கருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது, அவரைத்தான் முதலில் விசாரிக்க வேண்டும் என்றார் பன்னீர்செல்வம்.

சுமார் மூன்றரை ஆண்டு காலம் ஆகிவிட்டது. ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டு வாருங்கள். ஆறுமுகசாமி ஆணையமே பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறதே? அதன் சுவாசக்குழாயை நிறுத்தியது யார்? ஜெயலலிதாவுக்கு நன்றி காட்டிய லட்சணம் இதுதானா? இந்த மர்மத்தை வெளிப்படுத்தி விட்டு எடப்பாடி பழனிசாமிக்கு , 'அம்மாவின் தொண்டர்' என்ற பட்டம் தாருங்கள்.

செயலற்ற இந்த ஆட்சியில் அமைச்சராக இருப்பவர், ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினரின் குடும்பமே கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருப்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

கரோனா காலத்தில் லட்சக்கணக்கானோர் வேலை இழந்து நிற்கிறார்கள். ஆனால், இந்தக் கரோனா காலத்தில் 47 ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்ததாகவும், 15 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி சொல்லிவரும் பொய்களை வழிமொழிகிறார் ராஜேந்திர பாலாஜி.

அதிமுக ஆட்சியில் முதலீட்டாளர்கள் கலந்து கொண்ட இரண்டு மாநாடுகள் நடைபெற்றுள்ளன. முதல்வர் உலகம் சுற்றி வந்தார். அதில் எத்தனை தொழில்கள் தொடங்கினார்கள், எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது என்ற தகவலே இதுவரை இல்லை. இந்த நிலையில் கரோனா காலத்தில் தொழில் தொடங்கினோம், வேலை கொடுத்தோம் என்றால் யார் நம்புவார்கள்? இப்படி எல்லாம் சொல்வது, மக்களை திசை திருப்புவதற்காகத் தானே தவிர வேறல்ல.

எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றுவது இருக்கட்டும். பால்வளத் துறையிலேயே ஆயிரத்தெட்டு முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. ஆவின் வட்டாரமும் பால் முகவர்களும் சொல்லும் குற்றச்சாட்டுகள் மலையளவு உள்ளன.

பால் வாங்குவதில் பெறப்படும் கமிஷன்கள், மேற்கு மாவட்ட பால் விற்பனையில் விநியோகிக்கப்பட்ட போலி காசோலைகள், நிதி நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லி பால் விலையை ஏற்றிவிட்டு, புதிதாக ஆறு ஒன்றியங்களை ஏற்படுத்தி நிர்வாகச் செலவுகளை அதிகப்படுத்தியது, ஒன்றியங்களில் 'அவுட் சோர்சிங்' முறையில் இருந்த பணியிடங்களை நேரடி நியமனம் என்ற பெயரில் விற்பனை செய்தது, விதிமுறைகளுக்கு முரணான பணி நியமனங்கள், பதவி உயர்வுகள் என்று அதன்மூலம் பல கோடி ரூபாய் இழப்புகள், திருப்பதிக்கு மதுரையில் இருந்து அனுப்பிய இரண்டு லோடு நெய் தரம் சரியில்லையென்று திருப்பி அனுப்பியதை களவாடிய புகார், மாவட்ட ஒன்றியங்களின் பொது மேலாளர் பதவிகள் நியமனத்தில் நடைபெற்ற முறைகேடுகள், மதுரை பால் பண்ணையில் நடைபெற்ற முறைகேட்டுக்கு காரணமானவர்களை காப்பாற்றியது, இயந்திர தளவாடங்கள் வாங்கியதில் நடைபெற்றுள்ள இமாலயத் தவறுகள், ஆவின் பால் 'பை'க்கான பாலிதீன் பிலிம் கொள்முதல் முறைகேடு, தென்மாவட்டங்களில் பணிபுரியும் ஆவின் ஊழியர்களுக்கான மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகளில் தொடர்புடையவர்களைக் காப்பாற்றுவது, ஆருத்ரா ஊழல் - என்று ராஜேந்திர பாலாஜி பதில் சொல்ல வேண்டிய விவகாரங்கள் பல உள்ளன. முதலில் இந்தக் கொள்ளைகளுக்கு வரிசையாக ராஜேந்திர பாலாஜி பதிலளிக்க வேண்டும்!

விருதுநகர் மாவட்ட அதிமுக கூடாரத்தில் ராஜேந்திர பாலாஜியும், ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினரும் நடத்திக் கொண்டிருக்கும் உள்குத்து விவகாரங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததால் தமிழ் வார இதழ் ஒன்றின் பத்திரிகை நிருபர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் தூண்டிய விவகாரத்தை ஆட்சி அதிகாரத்தால் இன்றைக்கு மறைக்கலாம். ஆனால் அது விஸ்வரூபம் எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை எச்சரிக்கையாகத் தெரிவிக்கிறோம்.

ஒரே ஒரு உண்மையை ராஜேந்திர பாலாஜி ஒப்புக் கொண்டதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், 'திரைக் கடலோடியும் திரவியம் தேடும் உன்னத முதல்வர்' என்று சொல்லி இருக்கிறார். உண்மைதான், திரைக் கடலோடியும் திரவியம் தேடுவது மட்டும்தான் எடப்பாடி பழனிசாமியின் ஒரே வேலை. அந்த உண்மையை ஒப்புக்கொண்டதற்கு நன்றி".

இவ்வாறு அந்தக் கூட்டறிக்கையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்எல்ஏ மற்றும் தங்கம் தென்னரசு எம்எல்ஏ ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x