Last Updated : 16 Jun, 2020 06:26 PM

 

Published : 16 Jun 2020 06:26 PM
Last Updated : 16 Jun 2020 06:26 PM

குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம்: 2500 ஏக்கர் நிலம் கையகபடுத்தும் பணி விரைவில் முடியும்- நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் முடிவடையும் என, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதி பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து குலசேகரன்பட்டினம் பகுதியில் புதிய ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ முடிவு செய்தது. இதற்கு தேவையான இடத்தை கையகப்படுத்தி தருமாறு தமிழக அரசிடம் இஸ்ரோ சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதையடுத்து இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் அமைக்க சுமார் 2500 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு, நிலம் கையகப்படுத்தும் பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் தொடங்கியது.

இதற்காக தனி வருவாய் அலுவலர் மற்றும் 8 தனி வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ சார்பில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க 2500 ஏக்கர் நிலம் கையகபப்டுத்தப்படவுள்ளது. இந்த நிலம் 8 அலகுகளாக பிரிக்கப்பட்டு தனித்தனி வட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

இதில் இஸ்ரோ சார்பில் உடனடியாக பணிகள் தொடங்கப்படவுள்ள 4 அலகுகளில் நிலம் கையகபப்டுத்தும் பணிகள் முடிவடைந்து விரைவில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்படவுள்ளது. அரசு ஒப்புதல் அளித்தவுடன், நிலத்தில் நுழைந்து பணிகளை தொடங்க இஸ்ரோவுக்கு அனுமதி அளிக்கப்படும்.

அதன் பிறகு இஸ்ரோ சார்பில் கட்டுமான பணிகள் தொடங்கப்படும். மீதமுள்ள 4 அலகுகளிலும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவில் முடிவடையும் என்றார் ஆட்சியர்.

இதேபோல் ஆலந்தலையில் ரூ.52.46 கோடியிலும், பெரியதாழையில் ரூ.30 கோடியிலும் தூண்டில் வளைவுகள் அமைக்கப்படவுள்ள இடங்களையும், உடன்குடி அனல்மின் நிலைய திட்டப் பணிகளையும் ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரிதிவிராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x