Published : 16 Jun 2020 06:33 PM
Last Updated : 16 Jun 2020 06:33 PM

விசாரணைக்கு அழைத்துச் சென்று பெண்ணுக்குக் கொடுமை: ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

விசாரணைக்கு அழைத்துச் சென்ற பெண்ணைக் காவல் நிலையத்தில் வைத்துக் கொடுமைப்படுத்தியாக அளித்த புகாரில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதை இன்ஸ்பெக்டர், காவலர்கள் சம்பளத்தில் பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையை ஆதிலட்சுமி என்பவர் தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் அவரையும், அவரது மகனையும் வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவஹர், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இரவு 12 மணிக்கு அவரை வீட்டுக்குத் திருப்பி அனுப்பி விட்டுப் பணயமாக அவரது மகனை ஸ்டேஷனில் வைத்திருந்துள்ளனர்.

மறுநாள் காலையில் ஸ்டேஷனுக்கு வந்த ஆதிலட்சுமியை காவலர் ப்ரவீன் என்பவரும், கோர்ட் டூட்டி பார்க்கும் அனுராதா என்கிற பெண் காவலரும் தாக்கியுள்ளனர், தரக்குறைவாகத் திட்டியுள்ளனர். அன்று மாலை வரை அவருக்கு உணவு, தண்ணீர் எதுவும் கொடுக்காமல் மாலை 5 மணிக்கு ஜிடி கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் ஆதிலட்சுமி சுய நினைவை இழந்துள்ளார்.

அவரது நிலையைப் பார்த்த மாஜிஸ்திரேட் உடனடியாக அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லக் கூறியுள்ளார். ஆனால் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீஸார் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் மீண்டும் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து மிரட்டி மீண்டும் இரவு 9 மணிக்கு மாஜிஸ்திரேட் வீட்டுக்கு ரிமாண்டுக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆதிலட்சுமியின் நிலையைப் பார்த்த மாஜிஸ்திரேட் கடுமையாக ஆத்திரமடைந்துள்ளார். மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி அட்மிட் செய்யச் சொல்லி மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசியுள்ளார். மறுநாள் தானே நேரில் சென்று மருத்துவமனையில் பார்த்துள்ளார்.

பின்னர் அவர்கள் சட்டவிரோதமாக சிறையிலடைக்க முயல, சிறை நிர்வாகம் மீண்டும் போலீஸார் துணையுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தது. பின்னர் ஆதிலட்சுமி ஜாமீன் பெற்றார். இந்த விவகாரம் தொடர்பாக அவர் மனித உரிமை ஆணையத்திலும், காவல் உயர் அதிகாரிகளிடத்திலும் புகார் அளித்தார்.

இது தொடர்பாக, வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளர் ஜவஹர், காவலர்கள் பிரவீன் குமார், அனுராதா ஆகியோர் மீது மனித உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி மனித உரிமை ஆணையத்தில் ஆதிலட்சுமி புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், விநாயகர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் ஏற்பட்ட பிரச்சினையில், ஆதிலட்சுமிக்குத் தொடர்பில்லை என்பதும், விசாரணைக்கு ஆதிலட்சுமியை அழைத்துச் செல்லும் போது பெண் காவலர்களை வைத்து அழைத்துச் செல்லவில்லை என்பதும், மருத்துவர்கள் மிரட்டப்பட்டு மருத்துவ அறிக்கைகள் திருடப்பட்டிருப்பதும், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜவஹர், காவலர்கள் அளித்த வாக்குமூலங்கள் தவறானவை என மனித உரிமை மீறல் எனச் சுட்டிக்காட்டி, பொய் வழக்கால் பாதிக்கப்பட்ட ஆதிலட்சுமிக்கு 2 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க தமிழக உள்துறைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

இழப்பீட்டுத் தொகையை வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஜவஹர், காவலர் பிரவீன்குமார் மற்றும் பெண் காவலர் அனுராதா ஆகியோரிடம் இருந்து வசூலித்துக் கொள்ள வேண்டும் என அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார். ஜவஹரின் சம்பளத்திலிருந்து ரூ.1 லட்சமும், காவலர் ப்ரவீன், பெண் காவலர் அனுராதா சம்பளத்திலிருந்து தலா 50 ஆயிரம் பிடித்தம் செய்ய உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x