Published : 20 Sep 2015 10:09 AM
Last Updated : 20 Sep 2015 10:09 AM

இடஒதுக்கீடு புகார்: சென்னை பல்கலை. துணைவேந்தருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு இடைக்கால தடை

இடஒதுக்கீடு புகார் மீதான விசாரணைக்கு நேரில் ஆஜராகும் படி சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தேசிய ஆதிதிராவிடர் , பழங்குடியினர் ஆணையம் பிறப்பித்த சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் உதவிப் பதிவாளர் பதவி நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று இப்பல்கலையின் டாக்டர் அம்பேத்கார் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த சிலர், தேசிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் கொடுத்தனர்.

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகும்படி சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தேசிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் கடந்த ஜூலை மாதம் சம்மன் அனுப்பியது. ஆனால், துணை வேந்தர் ஆஜராகவில்லை.

பின்னர், ஆகஸ்ட் 13-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி துணை வேந்தருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. இதனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலை துணைவேந்தர் சார்பில் பதிவாளர் டேவிட் ஜவஹர் மனுதாக்கல் செய்தார். இடஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அதுபோன்ற மற்றொரு புகாரின் மீது விசாரணை நடத்த தேசிய ஆதிதிராவிடர், பழங்குடி யினர் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே, மேற்கண்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் இவ்வழக்கை விசாரித்து, தேசிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையத்தின் சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும், மனுவுக்கு சென்னைப் பல்கலைக்கழக டாக்டர் அம்பேத்கார் எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் சங்கம் மற்றும் தேசிய ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x