Published : 16 Jun 2020 06:18 PM
Last Updated : 16 Jun 2020 06:18 PM

மருத்துவப் படிப்பு: மத்திய தொகுப்பு இடங்களை ஓபிசிக்கும் பகிர்ந்தளிக்க புதிய திட்டம் வரையறுக்க வேண்டும்; உச்ச நீதிமன்றத்தில் விசிக வழக்கு

மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பு இடங்களை ஓபிசிக்கும் பகிர்ந்தளிக்க புதிய திட்டம் வரையறுக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, அக்கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று (ஜூன் 16) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அவ்வழக்கை அனுமதித்துள்ளது.

இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமை அல்ல; இட ஒதுக்கீடு வழங்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் கூறி தமிழ்நாட்டிலிருந்து திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.

அதனால் அவ்வழக்குகள் இப்போது உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ளன. அவை அடுத்த வாரம் திங்கள் கிழமை விசாரணைக்கு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கிறோம்.

உச்ச நீதிமன்றம்: கோப்புப்படம்

மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களைப் பகிர்ந்தளிப்பதில் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 15 ஆகிய உறுப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ள சமத்துவம் என்ற கோட்பாட்டைப் பின்பற்றவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைக் காரணம் காட்டி பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க மறுப்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.

மத்திய தொகுப்பு இடங்களை கேபினட் செயலாளர்களின் பிள்ளைகள், அயலுறவுத்துறை அதிகாரிகளின் பிள்ளைகள் என ஏற்கெனவே சலுகை பெற்ற உயர் வர்க்கத்தினருக்கே மத்திய அரசு அளித்து வருகிறது. அதில் எந்தவொரு சமத்துவக் கோட்பாடும் பின்பற்றப்படவில்லை. மத்திய அரசு தனது விருப்பம்போல் அந்த இடங்களை ஒதுக்கி வருகிறது. மத்திய அரசு தன்னிச்சையாக அப்படி நடந்துகொள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் இடமில்லை.

எனவே, உச்ச நீதிமன்றம் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென வழக்கில் கோரியுள்ளோம்.

1. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு எவ்விதத்திலும் அரசியலமைப்புச் சட்ட உறுப்பு 15 (4), பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்குத் தடையாக இல்லை என நீதிமன்றம் மத்திய அரசுக்கு விளக்க வேண்டும்.

2. சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சிறப்புச் சலுகை வழங்கும் 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி மருத்துவப் படிப்பிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென உத்தரவிட வேண்டும்.

3. மத்திய தொகுப்பு இடங்களைப் பகிர்ந்தளிப்பது தொடர்பாக மத்திய அரசு சமூகநீதியை அடிப்படையாகக் கொண்ட திட்டம் ஒன்றை வகுத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென்றும் அந்த இடங்கள் சலுகை பெற்ற உயர் வர்க்கத்தினருக்கே மீண்டும் பயனளிக்கும் விதமாக இருப்பது தடுக்கப்பட வேண்டுமென்றும் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

மேற்கண்டவாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடுத்துள்ள வழக்கில் கோரப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x