

நொய்யல் ஆற்றில் தண்ணீர் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி, துணைத் தலைவர் தீத்திபாளையம் பெரியசாமி மற்றும் நிர்வாகிகள், கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் இன்று (ஜூன் 16) மனு அளித்தனர்.
பின்னர் விவசாயிகள் கூறுகையில், "விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நொய்யல் நதியைத் தூர்வாரும் பணிக்கு தமிழக அரசு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
கோவை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள குளங்களைத் தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மேலும், நொய்யல் நதி நீரை அனைத்துக் குளங்களிலும் நிரப்ப, உரிய தடுப்பணைகள் அமைக்க வேண்டும். நொய்யல் நதியில் கழிவுநீர், தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும்.
நொய்யல் நதியைப் பாதுகாக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். நொய்யல் ஆற்றில் தண்ணீர் திருட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.