மருத்துவ இடங்களில் இட ஒதுக்கீடு: மத்திய அரசு பின்பற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு; புதுச்சேரி அரசு கொறடா தகவல்

அனந்தராமன்: கோப்புப்படம்
அனந்தராமன்: கோப்புப்படம்
Updated on
1 min read

மருத்துவ இடங்களை நிரப்புவதில் மத்திய அரசு, இட ஒதுக்கீட்டைப் பின்பற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக புதுச்சேரி அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டப்பேரவை அரசு கொறடா அனந்தராமன் எம்எல்ஏ இன்று (ஜூன் 16) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுச்சேரியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், எம்.டி, மருத்துவ படிப்புக்கான இடங்களில் இருந்து மத்திய அரசு குறிப்பிட்ட சதவீதத்தை எடுத்துக் கொள்கிறது. அந்த இடத்தில் எந்தவிதமான இட ஒதுக்கீடும் பின்பற்றப்படுவதில்லை. இதனால் புதுச்சேரியில் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, புதுச்சேரி மாநில மாணவர் நலன் கருதியும், மக்கள் நலன் கருதியும் முதல்வர் நாராயணசாமி அறிவுறுத்தலின் பேரில் மத்திய அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பெறும் இடத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தக் கோரி அரசு கொறடா என்ற முறையில் உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தாக்கல் செய்துள்ளேன்.

மத்திய அரசுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்பில் 15 சதவிகிதமும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவிகிதமும் வழங்கப்படுகிறது. இந்த இடங்களிலும், புதுச்சேரியில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 100 சதவிகித இடங்களையும் மத்திய அரசு நிரப்புகிறது.

ஆனால், அந்த இடங்களை நிரப்பும்போது இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. எனவே, இதில் புதுவை மாநில அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளேன்.

தமிழக அரசும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த 2 வழக்குகளும் வருகிற திங்கட்கிழமை (ஜூன் 22) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது".

இவ்வாறு புதுச்சேரி சட்டப்பேரவை அரசு கொறடா அனந்தராமன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in