Published : 16 Jun 2020 02:46 PM
Last Updated : 16 Jun 2020 02:46 PM

கரோனா மரண எண்ணிக்கை; ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் அரசு பதிலளிக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

கரோனா மரண எண்ணிக்கை குறித்து 2 நாளில் முழு விபரங்களை மக்கள் முன் வைக்காவிட்டால் வழக்கு தொடருவேன் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்ததற்கு பதிலளித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார் தாராளமாக வழக்கு தொடரட்டும் அரசு உரிய பதிலளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

நேற்று காணொலி மூலம் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கரோனா தொற்றால் உயிரிழப்பவர் மரணம் மறைக்கப்படுகிறது, அதுகுறித்த உண்மையான தகவலை மக்கள் மன்றம் முன் இரண்டு நாளில் அரசு வைக்காவிட்டால் நீதிமன்றத்தை நாடவேண்டி இருக்கும் என எச்சரித்திருந்தார்.

சென்னையில் மருத்துவமுகாமில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:

முழு ஊரடங்கு என்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை. நோய்த்தொற்று ஏற்பட்டு பரவும் அந்த தொடர்பை துண்டிக்க வேண்டும் என்றால் முழு ஊரடங்கு அத்தியாவசியம். உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வழக்கு தொடரப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஜனநாயகத்தில் சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகம் உள்ளது. நீதித்துறையை யார் வேண்டுமானாலும் நாடலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.

அவர்கள் நீதிமன்றம் போகட்டும் நாங்கள் உரிய பதிலை அளிப்போம். சென்னை, டெல்லி, மகாராஷ்டிரா, பெரிய மாநகராட்சிகளை ஒப்பிடும்போது சோதனை அதிகம் செய்வது நாம் தான். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மரண விகிதம் நம் மாநிலத்தில் குறைவு.

மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது குணமடைந்தவர்கள் சதவிகிதமும் நம் மாநிலத்தில் அதிகம். ஆகவே அவர் தாராளமாக நீதிமன்றம் போகட்டும். அரசு வெளிப்படையாக உள்ளது. உரிய தகவலை தினமும் வெளியிடுகிறோம். உரிய தகவலை அளிப்போம்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதில்லை, எதிர்க்கட்சிகளை அழைக்காததற்கு காரணம் இது மருத்துவம் சார்ந்த ஒரு விவகாரம், காவிரி பிரச்சினை, இட ஒதுக்கீடு போல ஆலோசனை நடத்தும் அவசியம் ஏற்படவில்லை”.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x