Published : 16 Jun 2020 07:01 AM
Last Updated : 16 Jun 2020 07:01 AM

சென்னையில் மீன் விற்பனையில் சிக்கல் நீடிப்பு: மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மீன் விற்பனையில் தொடர்ந்து சிக்கல் நீடிப்பதால் சென்னையில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

மீன்பிடி தடைக் காலம் முடிந்த நிலையில், ஜூன் 15 (நேற்று) முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதாக மீனவர்கள் அறிவித்தனர். ஆனால், சென்னையில் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதுதொடர்பாக, அகில இந்தியமீனவர்கள் சங்கத்தின் தேசிய செய்தி தொடர்பாளர் நாஞ்சில் பி.ரவி கூறியதாவது:

அனைத்து மீன் விற்பனை சந்தைகளையும் இயங்க அனுமதிஅளிக்க வேண்டும், தொழிலாளர்கள் பற்றாக்குறையைப் போக்க வெளிமாநில தொழிலாளர்கள் சென்னை வர அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்தோம்.

ஆனால், மீன்வளத் துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமேசுவரம் உட்பட தமிழகம் முழுவதும் ஏற்கெனவே மீன்பிடிக்கச் சென்றவர்களும் மீன்களை விற்பனை செய்தில் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே, இதுகுறித்து மீன்வளத் துறை உரிய நடவடிக்கைகள் எடுத்தால்தான் மீன்பிடிக்க அனைத்து படகுகளும் கடலுக்குச் செல்லும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுதொடர்பாக, மீன்வளத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “மீனவர்களில் ஒரு தரப்பினர் மட்டும் வரும் 18-ம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர். மற்றவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.

மீன்வளத் துறை அறிவுறுத்தல்

இதற்கிடையே மீன்வளத் துறை உதவி இயக்குநர் மீனவர்களுக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தலில், ‘‘சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 19-ம் தேதி அதிகாலை 12 மணிமுதல் முழு ஊரடங்கு அமலுக்குவருவதால் மீன்பிடி தொழிலுக்குமீனவர்கள் செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x