Published : 15 Jun 2020 08:22 PM
Last Updated : 15 Jun 2020 08:22 PM

தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு, பயிற்சி: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கரோனா தொற்று உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்திவரும் சூழலில், வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தாயகம் திரும்பும் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பையும் பயிற்சியையும் வழங்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்துக் கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமானது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இணைந்து, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களது திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு குறுகிய காலத் திறன் பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன் மூலம் அவர்களது வேலை பெறும் திறனை அதிகரித்து, தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுத்தரும் சேவையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

தற்போது கரோனா தொற்று உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சூழலில், வெளிநாடு மற்றும் இதர மாநிலங்களிலிருந்து தமிழர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.

அவர்களது வேலைத் திறன் மற்றும் முன் அனுபவங்களைக் கண்டறிந்து தகுதிக்கேற்ப தனியார் துறைகளில் பணிவாய்ப்பைப் பெற உதவுவதற்கும், திறன் பயிற்சி தேவைப்படும் தேர்வுகளில் அவர்களுக்கு உரிய திறன் பயிற்சிகளை வழங்கி தனியார் துறை நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற உதவுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையுடன் இணைந்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

தாயகம் திரும்பிய தமிழர்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் www.tnskill.tn.gov.in எனும் இணையதளத்தில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையதளப் பக்கத்தில் தங்களைப் பதிவு செய்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்குக் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தைத் தொடர்புகொள்ளலாம்’’.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x