Published : 15 Jun 2020 06:46 PM
Last Updated : 15 Jun 2020 06:46 PM

பேருந்துகளில் விசிலுக்குப் பதிலாக மணி: நடத்துநர்களின் நலன் காக்க அரசுக்கு யோசனை

அரசுப் பேருந்துகளில் நடத்துநர்கள் நலன் கருதி கேரளத்தில் இருப்பது போல் விசிலுக்குப் பதிலாக கையால் கயிறை இழுத்து மணி அடித்துப் பேருந்தை நிறுத்தவும், புறப்பட வைக்கவும் செய்யலாம் என நடத்துநர்கள் தரப்பிலிருந்து அரசுக்கு ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க ஆரம்பத்தில் கடுமையான பொதுமுடக்க விதிகள் பின்பற்றப்பட்டன. அப்போது பொதுப் போக்குவரத்தும் முற்றாக முடங்கியிருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பேருந்து சேவை மீண்டும் தொடங்கியது. 60 சதவீதப் பயணிகளை மட்டுமே அழைத்துச் செல்லவேண்டும் என்ற விதி இருந்தாலும் அரசுப் பேருந்துகளில் பல இடங்களில் இந்த விதியெல்லாம் காற்றில் பறக்கின்றது.

பேருந்து நடத்துநர்கள் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் பேருந்து நிற்பதற்கும், மீண்டும் இயக்கப்படுவதற்கும் விசில் ஊதிப் பேருந்தை இயக்குகின்றனர். அரசு வழிகாட்டியபடி நடத்துநர்கள் முகக்கவசம் அணிந்திருந்தாலும் ஒவ்வொரு முறையும் விசில் ஊதுவதற்காக முகக்கவசத்தைக் கழற்றி மாட்டும் சூழல் இருக்கிறது. இப்படி அடிக்கடி முகக்கவசத்தைக் கழற்றி மாட்டுவதால் நடத்துநர்களுக்கு மட்டுமின்றி பயணிகளுக்கும் கரோனா தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது.

இதுகுறித்து சி.ஐ.டி.யு போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகியான லியோ கூறுகையில், “அடிக்கடி முகக்கவசத்தைக் கழற்றுவது ஆபத்து என்பது தெரிகிறது. ஆனால், இது எங்களுக்கு மட்டுமான ஆபத்து இல்லை. உள்ளூர்ப் பேருந்து என்றால் குறைந்தது ஒரு நாளைக்குப் பத்து முறையாவது அருகிலுள்ள ஊர்களுக்குச் சென்று வரும். குறைந்தபட்சம் 400 பேர் வரை தினசரி ஒரு பேருந்தில் பயணிக்கிறார்கள். அத்தனை பேருக்கும் நடத்துநரே டிக்கெட்டை விநியோகிக்கிறார். இதனால் ஒரு நடத்துநருக்குப் பாதிப்பு வந்தாலும் அது பலருக்குப் பரவும் சூழல் அதிகம். இதனால் நடத்துநர்கள் அடிக்கடி முகக்கவசத்தைக் கழற்றி விசில் ஊதுவது ஆபத்தானது.

இதற்கு மாற்றாக பேருந்துகளில் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் பின்பற்றும் நடைமுறைகளை நாமும் செயல்படுத்தலாம். கேரள அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர் இருக்கையின் அருகில் இருக்கும் மணியில் கயிறு கட்டிப் பின்னால் வரை இழுத்துவிட்டிருப்பார்கள். நடத்துநர் கயிறைப் பிடித்து அசைப்பதன் மூலம் பேருந்தை ஓட்டுநர் நிறுத்தவும், ஓட்டவும் செய்வார். இப்படிச் செய்வதால் முகக்கவசத்தை நடத்துநர் கழற்ற வேண்டிய அவசியமும் இல்லை. இதை தமிழக அரசுப் பேருந்துகளிலும் அமல்படுத்தலாம்.

அதுமட்டுமல்ல, எங்களுக்கு வேறு சில கோரிக்கைகளும் இருக்கின்றன. 50 சதவீதப் பேருந்துகளே இயக்கப்படும் நிலையில் அனைத்துப் பணியாளர்களும் தினமும் பணிக்கு வரவும், வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடவும் வேண்டுமென சில இடங்களில் சொல்கிறார்கள். பேருந்து நிறுத்தங்களில் பணியமர்த்தப்படும் ஓட்டுநர், நடத்துநர்களுக்கு எவ்வித பணப் பலன்களும் வழங்கப்படவில்லை. பேரிடரில் பணி செய்வோருக்கான சிறப்பு நிதியும் வழங்கப்படவில்லை.

இப்படி எங்களின் 22 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினரும் சேர்ந்து இன்று காலையில் நாகர்கோவில் ராணித்தோட்டம் பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x