Published : 15 Jun 2020 06:08 PM
Last Updated : 15 Jun 2020 06:08 PM

ஜெ.அன்பழகன் மறைவு: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிப்பு 

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன், கடந்த 2-ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக சென்னை, ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமானது. வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அவரது பிறந்த நாளான ஜூன் 10 அன்று காலை காலமானார்.

மறைந்த ஜெ.அன்பழகன் திமுக சார்பில் 3 முறை போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக வென்றவர். 2001-ல் தியாகராய நகர் தொகுதியிலும், 2011, 2016 ஆகிய தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட்டு வென்றார். அவர் மரணமடைந்ததை அடுத்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியாக உள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்களின் பலம் 100 ஆக இருந்த நிலையில், கே.பி.பி. சாமி, எஸ்.காத்தவராயன் மறைவுக்குப் பிறகு 98 ஆகக் குறைந்தது. ஜெ.அன்பழகனும் மறைந்த நிலையில், அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது 97 ஆகக் குறைந்துள்ளது. இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 231 ஆக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x